தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சரவணா ஸ்டோர் அருள் சரவணன் தற்போது தனது 2-வது படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளராக லெஜண்ட் சரவணா, கடந்த 2022-ம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். ஜேடி- ஜெர்ரி இணைந்து இயக்கிய இந்த படம் பான் இந்தியா படமாக வெளியான நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி பிரபல நடிகர்கள் பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து லெஜண்ட் சரவணா அடுத்து கருடன் படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனது 2-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய நிலையில், இந்த படத்தில்,இருவர் உள்ளம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் ஷாம் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடியில் உள்ள பணிக்க நாடார் குடியிருப்பு கிராமத்தில் லெஜண்ட் சரவணனின் சொந்த ஊரில் நடைபெற்று வருகிறது.
அதே நேரத்தில் ஜார்ஜியா, மும்பை மற்றும் டெல்லியிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து அருள் சரவணன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. மேலும் முதல் படத்தில் தனது தோற்றத்திற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்ட லெஜண்ட் சரவணா தற்போது தனது 2-வது படத்திற்காக தனது கெட்டப்பையே மாற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“