நடிகர் அஜித்குமாருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு தனக்கு விரைவில் கிடைக்கும் என தான் கருதுவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்ட இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினிகாந்தை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார்.
இதனிடையே, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா கூறியது. இந்த செய்தி அஜித்குமாரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
எனினும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அஜித்குமாரின் ரசிகர்களை சற்று ஆறுதல் படுத்தியது.
இந்நிலையில், நடிகர் விஜய்யை வைத்து இரண்டு திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜிடம், அஜித்குமாருடன் எப்போது பணியாற்ற போகிறீர்கள் என்று தொடர்ச்சியாக ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
அண்மையில், துபாயில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அப்போதும், அஜித்குமாருடன் இணைந்து எப்போது பணியாற்றுவீர்கள் என ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், "எல்லோரைப் போன்றும் எனக்கும் AK சாரோடு இணைந்து பணியாற்ற ஆசை இருக்கிறது. கூடிய சீக்கிரம் இது நடந்துவிடும் என நினைக்கிறேன்" எனக் கூறினார்.
லோகேஷ் கனகராஜின் இந்த பதில், அஜித்குமாரின் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ஆர்வலர்களிடையேயும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.