New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/20/yugabarathi-2025-07-20-16-14-47.jpg)
'ஜீன்ஸ்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அன்பே அன்பே கொல்லாதே' பாடலில் வரும் 'தேவதை குளித்த துளிகளை தீர்த்தம் என்று நான் குடிப்பேன்' என்ற வரிகள் குறித்து தனது கருத்துகளை பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.
'ஜீன்ஸ்' திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'அன்பே அன்பே கொல்லாதே' பாடலில் இடம்பெற்ற 'தேவதை குளித்த துளிகளை தீர்த்தம் என்று நான் குடிப்பேன்' என்ற வரிகள் மீது தனக்கு இருந்த விமர்சனம் குறித்து பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த வரிகள் எவ்வாறு உருவானது என்பதை தான் அறிந்த பின்னர், தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ, தீக்கதிர் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.
அதில், "கம்பராமாயணத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை தன்னுடைய பாடலில் வைக்கும் அளவிற்கு கண்ணதாசனுக்கு இலக்கிய ஆளுமை இருந்தது. இப்படி பலரும் தங்களது பாடல்களில் ஒவ்வொரு விஷயங்களை கையாண்டிருப்பார்கள். கவிஞர் வைரமுத்துவின் பாடல்களிலும் சிலவற்றை நாம் பார்க்க முடியும்.
'ஜீன்ஸ்' திரைப்படத்தில் 'அன்பே அன்பே கொல்லாதே, கண்ணே கண்ணை கிள்ளாதே' என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். இந்தப் பாடலில் 'தேவதை குளித்த துளிகளை தீர்த்தம் என்று நான் குடிப்பேன்' என்ற வரிகள் வரும். இந்த வரிகளை கேட்கும் போது எனக்கு பிடிக்காது. குறிப்பாக, முதன்முதலாக இந்த வரிகளை கேட்ட போது, மிகவும் குறைவாக மதிப்பிட்டேன். இதனால் வைரமுத்து மீது எனக்கு செல்லமாக கோபமும் இருந்தது.
ஆனால், ஆந்திராவின் அகநானூறு இலக்கியத்தை படிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான், இந்த வரிகளை அந்த அகநானூறு இலக்கியத்தில் இருந்து வைரமுத்து எழுதினார் என்று நான் புரிந்து கொண்டேன். இந்த தகவலை உணர்ந்த பின்னர் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய பாடல்களிலும் சங்க இலக்கியங்களை புகுத்த வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.
அந்த வகையில், 'ரம்மி' திரைப்படத்தில் 'அடியே என்ன ராகம்' என்ற பாடலை எழுதினேன். அதில், 'முழுசா உன்னால நானும் ஆனேன் புள்ள தீட்டு' என்ற வரிகளை எழுதினேன். சங்க இலக்கியத்தில் பெண்களின் மாதவிடாயை குறிப்பிட்டு எழுதிய பாடலை, ஆணின் பார்வையில் இருந்து பாடுவதை போன்று நான் மாற்றி அமைத்தேன். இப்படி பல விஷயங்களுக்கு சங்க இலக்கியங்கள் உந்து சக்தியாக இருந்துள்ளன" என்று பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.