/indian-express-tamil/media/media_files/2025/09/24/joy-cri-2025-09-24-15-47-26.jpg)
ஜாய் கிரிஸில்டா கொடுத்த மோசடி புகார்: மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் ஆஜராக சம்மன்
’மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார் மாதம்பட்டி ரங்கராஜ். தொடர்ந்து இவர் ‘பென்குயின்’ என்ற படத்தில் நடித்திருந்தார். நடிகராக மட்டுமல்லாமல் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் மாதம்பட்டி ரங்கராஜ், முன்னணி நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்து கொடுத்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், தனியார் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், மாதம்பட்டி ரங்கராஜ் பேசும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.
இந்த செய்தி இணையத்தில் தீயாக பரவியது. அதுமட்டுமல்லாமல், மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் விவாகரத்து செய்யாமல் எப்படி ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்து கொள்வார் என்று பலரும் விமர்சித்து வந்தனர். நிலமை இப்படி இருக்க திடீரென காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார்.
இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜிடம் காவல்துறையினர் ஆறு மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் சில ஆதாரங்களை அளித்ததாக கூறப்படுகிறது. தற்போது காவல் துறையினர் மாதம்பட்டி ரங்கராஜை வரும் 26-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த சம்மன் அடிப்படையில் காவல்துறையினர் அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்வார்கள். இந்த விசாரணைக்கு பின்னர் காவல்துறையினர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக, மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மன நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என். செந்தில்குமார், ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட வீடியோக்கள் மற்றும் கருத்துகள் குறித்து விரிவான விசாரணை தேவை என்று குறிப்பிட்டார்.
மேலும், மாதம்பட்டி ரங்கராஜ் நிறுவனம் தனது இழப்புகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.