/indian-express-tamil/media/media_files/2025/06/05/DzP28OzKvxYRmCjd8OM1.jpg)
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் வட்டியுடன் பணத்தை திரும்பச் செலுத்த ஐகோர்ட் உத்தரவு
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ.21 கோடியே 29 லட்சம் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இந்தக் கடனை விஷால் முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் அனைத்துப் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கே வழங்கப்பட வேண்டும் என்று இருதரப்பும் ஒப்பந்தம் செய்துகொண்டன.
இந்த ஒப்பந்தத்தை மீறி விஷால் தனது படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தை உடனடியாகத் திருப்பித் தர உத்தரவிடக்கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 21.29 கோடி கடனை 30% வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று விஷாலுக்கு உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தக் கோரி லைகா நிறுவனம் சார்பில் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேமா ஸ்ரீனிவாசன், "விஷால் தற்போது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'மகுடம்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்தப் படத்துக்காக அவர் பெறும் தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற நீதிபதி, மனு குறித்து நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.