அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் நடித்திருந்த 'மாஃபியா' திரைப்படம் போதை மருந்து கடத்தும் தொழில் செய்யும் டானுக்கும், போதைத் தடுப்புப் பிரிவு அதிகாரிக்கும் நடக்கும் மோதலைச் சொல்வதாக இருந்தது. இதில் ஒரு காட்சியில் போலீஸ் விசாரணை செய்துள்ள விவரங்கள் ஒரு பலகையில் எழுதப்பட்டிருக்கும். இதில் அந்த போதை மருந்து கடத்தல் செய்பவனிடம் தொடர்பிலிருப்பவர்கள் என்று சிலரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கும்.
Advertisment
Advertisements
ஆனால், உண்மையில் இது கனடாவில் ப்ரூஸ் மெக் ஆர்தர் என்ற சீரியல் கொலைகாரனால் கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்கள். அவன் கொன்ற எட்டுப் பேரில் ஐந்து பேரின் புகைப்படங்கள் தான் அந்தக் காட்சியில், போதைப் பொருள் கடத்தலில் தொடர்புள்ளவர்கள் என்று காட்டப்பட்டுள்ளது. ஸ்கந்தராஜ் நவரத்னம், செலிம் எசென், அப்துல்பசீர் பைஸி, கிருஷ்ணா கனகரத்னம் மற்றும் சோரூஷ் மஹ்முடி ஆகிய 5 பேர் தான் அது.
படத்தில் வரும் காட்சி
கொலையானவர்களில் ஒருவரின் உறவினர், "ஏன் இவர்கள் எங்கள் குடும்பங்களுக்கு மீண்டும் நரகத்தைத் தருகிறார்கள். இது முற்றிலும் கண்ணியமற்ற செயல். தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு தமிழ்ப் படத்தில், மோசமாக மரணத்தைச் சந்தித்த 5 பேரை இப்படி காட்டியிருப்பது மோசமான செயல்" என்று கண்டித்துள்ளார்.
2019-ம் ஆண்டு, டொரண்டோ நகரில், ப்ரூஸ் மெக் ஆர்த்தர் என்பவன் 2010-லிருந்து, 2017 வரை தொடர் கொலைகள் செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டான்.
இந்தப் புகைப்பட சர்ச்சை குறித்து அறிந்த அமேசான் நிறுவனம், "டொரண்டோ தொடர் கொலையில் கொலையானவர்களின் புகைப்படங்கள் படத்தில் இடம்பெற்றது குறித்து அறிந்தோம், அதற்காக வருந்தினோம். அதனால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" என்று கூறியுள்ளது. இந்த விஷயம் குறித்து அறிந்த லைகா தரப்பு, சம்பந்தப்பட்ட குடும்பங்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்பதாகவும், இந்தியாவில் ஊரடங்கு முடிந்தவுடன் அந்தப் புகைப்படங்கள், படத்தில் இருந்து மறைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”