மகாராஷ்டிரா அரசின் பாதுகாப்பு முகமைகள் நடிகர் ஷாருக்கானுக்கு அச்சுறுத்தல் இருப்பதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு Y+ வகை பாதுகாப்பு வழங்கியுள்ளனர். இருப்பினும் மும்பை போலீஸ் வட்டாரங்கள் அவருக்கு என்ன வகையான அச்சுறுத்தல் என்பதை சொல்ல மறுத்துவிட்டனர்.
ஆதாரங்களின்படி, மகாராஷ்டிரா மாநில புலனாய்வுத் துறை (SID), அக்டோபர் 5 தேதியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு மூலம், மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் கமிஷன்கள், மாவட்ட போலீஸ் மற்றும் சிறப்பு பாதுகாப்பு பிரிவுகளுக்கு (SPUs) கடிதம் அனுப்பியது. அதில் நடிகர் ஷாருக்கானுக்கு “Y+ ஐ எஸ்கார்ட் அளவிலான பாதுகாப்பை உடனடியாக வழங்குமாறு தெரிவித்திருந்தது.
நடிகருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து சமீபத்தில் நடந்த உயர் அதிகாரக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஒய்+ பிரிவில், கானுக்கு 6 கமாண்டோக்கள், 4 காவலர்கள் மற்றும் 1 போக்குவரத்து அனுமதி வாகனம் உட்பட 11 பாதுகாப்புப் பணியாளர்கள் இருப்பர். மேலும் ஷாருக்கானின் பங்களா வீட்டில் போலீஸ்காரர்கள் காவலுக்கு அமர்த்தப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த உயர்மட்டக் குழு பரிந்துரை மற்றும் மறுஆய்வுக் குழு கூடும் வரை இந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஷாருக், தீபிகா படுகோன் நடித்த பதான் படத்தில் இடம் பெற்ற பேஷரம் ரங் பாடல் பெரும் சர்ச்சையானது. இந்தப் பாடலுக்கு பா.ஜ.க மற்றும் பிற அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா, நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
https://indianexpress.com/article/cities/mumbai/maharashtra-gives-y-security-cover-to-shah-rukh-khan-amid-threats-8974135/
மேலும் இந்த ஆண்டு ஆகஸ்டில், ஆன்லைன் கேமிங் ஆப்ஸை பிரபலங்கள் ஆதரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பிரபலங்கள் வீட்டின் முன் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் ஷாருக்கான் பங்களாவுக்கு வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது, இது போன்ற விளம்பரங்கள் இளைய தலைமுறையினரை தவறாக வழிநடத்துகிறது மற்றும் சிதைக்கிறது என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதேபோல் 2010-ம் ஆண்டிலும், அவரது திரைப்படமான மை நேம் இஸ் கான் வெளியானதைத் தொடர்ந்து அவருக்கு அச்சுறுத்தல்கள் வந்ததை அடுத்து அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“