ஜான்வி பட்
Mahatma Gandhi @ 150: இன்று அக்டோபர் 2, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள். அதோடு இயக்குநர் விஜய் பட்டின் ’ராம் ராஜ்யா’ படம் இந்தியா முழுவதும் வெளியாகிய 76 ஆண்டுகளையும் குறிக்கிறது. எனது தாத்தாவின் வாழ்க்கையில் அது ஒரு மைல்கல். வரலாற்றில் மகாத்மா காந்தி தனது வாழ்நாளில் பார்த்த ஒரே இந்தி படமாக ’ராம் ராஜ்யா’ வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது.
விஜய் பட் முதன்முதலில் மகாத்மா காந்தியை 1930-களின் பிற்பகுதியில் நண்பர்களுடன் சென்ற ’வல்சாத்’ பயணத்தில் சந்தித்தார். பட் ஒரு இயக்குநர் என்பதை அறிந்த காந்தி, “ஏன் நீங்கள் நர்சி மேத்தாவைப் பற்றி ஒரு படம் இயக்கக் கூடாது?” என்று கேட்டார். நர்சி மேத்தா குஜராத்தைச் சேர்ந்த ஒரு கவிஞர், அதோடு துறவியும் கூட. அவரது “வைஷ்ணவ் ஜான் டு டெனே ரீ கஹியே ஜெ…” என்ற பஜனை பாடல் காந்திக்கு மிகவும் பிடித்த ஒன்று.
உடனடியாக இந்த ஸ்கிரிப்ட்டில் வேலை செய்யத் தொடங்கினார் விஜய் பட். 1940-ல் இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் தயாரிக்கப்பட்ட ’நர்சி மேத்தா’ வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்று, இந்தியா முழுவதும் வெள்ளி விழாவைக் கொண்டாடியது. ஆனால் காந்தி அந்தப் படத்தைப் பார்க்காததை கடினமாக உணர்ந்தார் விஜய் பட். ஆனால் 1943-ல் அவர் தயாரித்து இயக்கிய ’ராம் ராஜ்யா’ படம் மகாத்மாவுக்குக் காண்பிக்கப்பட்டது.
1945 ஆம் ஆண்டில், ஜுஹுவில் உள்ள திரு. சாந்திகுமார் மொரார்ஜியின் பங்களாவில் காந்தி இருப்பதை அறிந்த விஜய் பட், அவருக்கு தன் படத்தைப் போட்டுக் காட்ட விரும்பினார். ஆனால் மகாத்மா காந்தியின் செயலாளர், திருமதி. சுஷிலா நாயர், படத்தை திரையிட 40 நிமிடங்கள் மட்டுமே விஜய் பட்டுக்குக் கொடுத்தார்.
படம் தொடங்கியதும், அதில் மூழ்கிய மகாத்மா காந்தி எந்தத் தடையும் இல்லாமல் 90 நிமிடங்கள் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார். அது அவர் மெளன விரதம் இருக்கும் நாள் என்பதால், பட்டின் முதுகில் தட்டிக் கொடுத்து தனது பாராட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். இது என் தாத்தா வாழ்க்கையின் மிகப்பெரிய தருணங்களில் ஒன்று.
இதை ஆங்கிலத்தில் படிக்க - Mahatma Gandhi @ 150: Ram Rajya and how it became the only Hindi film Bapu ever saw