தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் இன்னொசென்ட் (75). இவர் மலையாள சினிமா சங்கத்தின் தலைவராகவும் 15 ஆண்டுகள் இருந்துள்ளார்.
750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் காந்தி நகர் 2ஆம் தெரு, முகுந்தேட்டா சுமித்ரா விழிக்குனு, அக்காரே நின்னொரு மாறன், ராம்ஜிராவ் ஸ்பீக்கிங், தூவல்பர்ஷம் உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.
மாநில அரசின் சிறந்த நடிகர் விருதை 3 முறை வென்றுள்ளார். இந்நிலையில், 2012ஆம் ஆண்டு இன்னொசென்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
அவருக்கு தொண்டை புற்றுநோய் காணப்பட்டது. இதற்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு புற்றுநோயின் தாக்கம் தீவிரம் அடைந்தது.
திடீர் உடல் நலக் குறைவாலும் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் நடிகர் .இன்னொசென்ட் இன்று (மார்ச் 26) இரவு காலமானார்.
நடிகர் இன்னொசென்ட் Laughter in the Cancer Ward என்ற நூலையும் எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துரைத்தது.
புற்றுநோயை புன்னகையுடன் எதிர்கொண்ட நடிகர் இன்னொசென்ட் கேரளாவில் உள்ள சாலக்குடி என்ற பகுதியில் பிறந்தவர் ஆவார்.
அவர் பிறந்த தொகுதியிலேயே எம்.பி. ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரின் மறைவுக்கு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும், சினிமா திரை நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றன.
நடிகர் இன்னொசென்ட் கடைசியாக நடிகர் பிரித்திவி ராஜின் கடுவா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/