பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான த்ரிஷ்யம் மற்றும் த்ரிஷ்யம் 2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் 3-ம் பாகம் குறித்து நடிகர் மோகன்லால் அப்டேட் கொடுத்துள்ளார்.
கேரளாவை தாண்டி தமிழகத்திலும் மலையாள படங்கள் வெற்றியை குவித்து வருகிறது. தமிழில் வெளியானலும், மலையாளத்தில் வெளியானதாலும், நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் வெளியான ஒரு படம் தான் த்ரிஷ்யம். கடந்த 2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இந்த படம் மலையாளம் கடந்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
மோகன்லால், மீனா, ஆஷா சரத், எஸ்தர் அனில், சித்திக், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தெரியாமல் கொலை செய்த தனது குடும்பத்தை பாதுகாக்க, குடும்ப தலைவரான நாயகன் எந்த அளவிற்கு ரிஸ்க் எடுக்கிறார் என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம், தமிழ் இந்தி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமெக் செய்யப்பட்டது.
முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து த்ரிஷ்யம் படத்தின் 2ம் பாகம் ஜீத்து ஜோசப் மோகன்லால் கூட்டணியில், கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது. நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியான இந்த படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறவில்லை. முதல் பாகத்தை விடவும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் வெளியான த்ரிஷயம் 2 திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், தமிழை தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியை குவித்தது.
த்ரிஷ்யம் படத்தின் 2-ம் பாகம் வெளியானபோதே படத்தின் 3-ம் பாகம் வரும் என்றும், அதற்கான க்ளைமேக்ஸ் ரெடியாகிவிட்டது என்று இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறியிருந்தார். அதன்படி இன்று (பிப்ரவரி 20) த்ரிஷ்யம் படத்தின் 3-ம் பாகத்திற்கான அப்டேட்டை நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ளார். கடந்த காலம் எப்போதும் அமைதியாக இருக்காது. த்ரிஷயம் 3 உறுதி என்று மோகன்லால், ஆண்டனி பெரும்பாவூர், இயக்குனர் ஜீத்து ஜோசப் ஆகியோர் இருக்கும் புகைப்படத்துடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் மூலம் இந்திய அளவில் த்ரிஷ்யம் 3 படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மோகன்லால் நடிப்பில் ப்ரித்விராஜ் இயக்கி வரும் எல் 2 எம்புரன் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், தற்போது மோகன்லால் தனது அடுத்து படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.