மலையாள சினிமாவில் தற்போது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விவகாரம் காரணமாக நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்த நடிகர் மோகன்லால் ஓடி ஒளிந்துவிட்டதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இது குறித்து மோகன்லால் விளக்கம் அளித்துள்ளார்.
மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும், வன்கொடுமைகள், மற்றும் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கேரளா அரசு அமைத்த ஹேமா கமிட்டி கடந்த 2019ம் ஆண்டு தங்களது அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், இந்த அறிக்கை 5 வருட இடைவெளிக்கு பின் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை வெளியானது முதல் மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், நடிகர் ரஞ்சித் மற்றும் சித்திக் ஆகியோர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பல உச்ச நடிகர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து தலைவர் மோகன்லால் உட்பட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில், நடிகர் மோகன்லால் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை எவ்வித பதிலும் கூறாதது பலரின் கேள்விகளுக்கு வழி வகுத்தது
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்த மோகன்லால், ஓடி ஒளிந்துவிட்டார் என்று பலரும் கூற தொடங்கிய நிலையில், தற்போது தான் ஓடி ஒளியவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் என்று மோகன்லால் கூறியள்ளார். இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பத்திரிக்கையாளர் சந்திப்பில், மோகன்லாலிடம் அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், மலையாள திரையுலகில் 21 சங்கங்கள் இருக்கும்போது அம்மாவை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்? அனைத்து கேள்விகளுக்கும் அம்மா சங்கம் மட்டும் எப்படி பதில் சொல்ல முடியும்? நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. இங்கு தான் இருக்கிறேன். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான ஹேமா கமிட்டி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அம்மா சங்கம் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பாதீர்கள் என்று மோகன்லால் கூறியுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான அரசும், நீதிமன்றமும், தங்களது கடமையை செய்கின்றன. இந்த பாலியல் புகார் காரணமாக கடைநிலை ஊழியர்கள் பாதிக்கப்பட கூடாது. இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒட்டுமொத்த மலையாள திரையுலகமும் பதில் சொல்லும். எனவே மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான அம்மா சங்கம் மீது அவதூறு பரப்ப வேண்டாம். வயநாடு பேரிடரின் போது அம்மா சங்கம் மக்களுக்கு பெரிய உதவிகள் செய்துள்ளது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேச வேண்டாம் என்று மோகன்லால் மேலும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“