mansoor-ali-khan | trisha | police: தமிழ் திரையுலகில் மூத்த நடிகராக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் அண்மையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதள பக்கங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
நடவடிக்கை
தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இதனையடுத்து, மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவை ஏற்று, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோருக்கு, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
வழக்கு
இதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகக்கோரி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். இதையடுத்து நேற்று மன்சூர் அலிகான் சென்னை, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மன்னிப்பு
இந்த நிலையில், 'எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு' என்று கூறி நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கை வெளியாகி சில மணி நேரங்களில் நடிகை திரிஷா தனது எக்ஸ் தளத்தில், 'தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது தெய்வத்தன்மை' என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவேண்டும் என திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.