இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் வைகைப் புயல் வடிவேலு, நடிகை கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், இசை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் என பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அரசியலில் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் உதயநிதியின் கடைசி படமா? அதனால்தான் இப்படி பல நட்சத்திர நடிகர்களுடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்படுகிறதா என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.
திமுக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ என அரசியலில் பிஸியாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், சினிமாவிலும் நடித்து வருகிறார். நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்யவும் தயாராகி வருகிறார்.
அதே நேரத்தில், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர் பாபு, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். உதயநிதி அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருவதால், அவர் மிகவும் குறைவான படங்களிலேயே நடிக்க வாய்ப்பு உள்ளது. அனேகமாக, சினிமாவுக்கு முழுக்கு போடவும் வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்தன.
இந்த நிலையில்தான், பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் மூலம் தமிழ் சினிமா உலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதியின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் உதயநிதி ஹீரோவாக நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷிடமும் பேசப்பட்டு வருவாதக கூறப்படுகிறது. மேலும், வில்லனாக பகத் பாசில், வைகைப் புயல் வடிவேலு நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உதயநிதியின் இந்த படத்துக்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட உள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் இதுவரை நடித்த படங்கள் பெரும்பாலும், பெரிய பட்ஜெட் படங்கள் இல்லை. ஆனால், இந்த படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு என பல பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பதால் தீவிர அரசியலில் இருக்கும் உதயநிதியின் கடைசி படமா என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன. எப்படியிருந்தாலும், இப்போதே மாரி செல்வராஜ் - உதயநிதி கூட்டணியில் உருவாகும் புதிய படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”