/indian-express-tamil/media/media_files/2025/05/15/ddYsLYqYZ5wUILg6viRC.jpg)
நடிகை மீனா தனது சினிமா அனுபவங்களை, குறிப்பாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘முத்து’ திரைப்படம் குறித்து பகிர்ந்துள்ளார். இந்த பேட்டியில், ரஜினிகாந்தின் இயல்பான குணம், அவரது வேகம், மற்றும் அது காரணமாக தனக்கு ஏற்பட்ட ஒரு மறக்க முடியாத அனுபவம் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதில் முத்து திரைப்படம் ஷூட்டிங்கின்போது நடந்த மறக்க முடியாத அனுபவங்கள் குறித்தும் அவர் புதியதலைமுறை டிவிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
முத்து திரைப்படம், 1995ஆம் ஆண்டு வெளியான ஒரு அதிரடி, நகைச்சுவை மற்றும் குடும்பத் திரைப்படம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மீனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு ஆகியோருடன், ரகுவரன், ராதா ரவி, வடிவேலு, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உருவான "ஒருவன் ஒருவன் முதலாளி", "தில்லானா தில்லானா" போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. இந்நிலையில் முத்து படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு சுவாரசியமான அனுபவத்தை பற்றி நடிகை மீனா பகிர்ந்துள்ளார்.
‘முத்து’ திரைப்பட படப்பிடிப்பின்போது ஒருமுறை, ரஜினிகாந்த் கூட்டம் நிறைந்த இடத்தில் மிக வேகமாக நடந்து சென்றுவிட்டாராம். ஆனால், மீனா கீழே அமர்ந்து இருந்ததால் கூட்டத்தில் சிக்கிக் கொண்டாராம். அசிஸ்டண்ட்ஸ் வருவதற்குள் கூட்டத்தில் மாட்டி சிரமப்பட்டதாக கூறினார். அப்போது தனது தாயும் உணவு ஏற்பாடு செய்ய சென்றுவிட்டாராம்.
அதுமட்டுமின்றி படப்பிடிப்பு இடைவேளையின்போது ரஜினிகாந்த் சென்றுவிட்ட நிலையில், கூட்டத்தில் மாட்டிக்கொண்ட மீனா பயத்துடன் கோபமாக அழுதுள்ளார். இந்த சமயத்தில், இயக்குனர் ரவிக்குமார் அவரிடம் என்னவாயிற்று என கேட்கையில் கோபத்துடன் அழுது அவரை திட்டிவிட்டதாக கூறினார். பின்னர் இயக்குநர் ரவிக்குமார் மீனாவை சமாதானப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு மட்டுமின்றி, ரஜினியின் பண்பு குறித்தும் மீனா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். ஒருமுறை, படப்பிடிப்பு முடிந்ததும் மீனா மெதுவாக நடந்து வந்திருக்கிறார். அப்போது, ஒரு சூப்பர்ஸ்டார் என்பதைக் கூட பொருட்படுத்தாமல், ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ரவிக்குமார் இருவரும் அவருக்காக காத்திருந்தனர். இதை ஒரு ராணி போல உணர்ந்ததாக மீனா கூறுகிறார். ஒரு சூப்பர்ஸ்டாராக இருந்தபோதிலும், சக மனிதர்களை மதித்து சமமாக நடத்துவதை ரஜினியிடம் இருந்து தான் கற்றுக்கொண்டதாகவும் மீனா குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.