சினிமாவிலும் அரசியலிலும் வெற்றிக் கொடி நாட்டி முதலமைச்சராகவும் பதவி வகித்தவர் எம்.ஜி.ஆர். சினிமாவில் எம்.ஜி.ஆர் உடன் நடிக்க பலரும் போட்டி போட்ட காலத்தில், எம்.ஜி.ஆர். அந்த நடிகை எவ்வளவு பெரிய டான்ஸர் என்னால் நடிக்க முடியாது என்று மறுத்த நிகழ் நடந்துள்ளது. பின்னர், பங்காரா டான்ஸ்க்கு எம்.ஜி.ஆர் போட்ட 2 கண்டிஷன்கள் என்ன பிறகு எப்படி டான்ஸ் ஆடினார் என்பதை இந்த கிளாஸிக் ஸ்டோரியில் பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் திலகமாக கொண்டாடப்பட்டாலும் பொதுவாக எம்.ஜி.ஆருக்கு டான்ஸ் ஆட வராது என்று சொல்வார்கள். சினிமாவில் அவர் ஆடுவதுதான் நடனம், ஒரு பாட்டுக்கு நிலையா ஒரு இடத்தில் இருந்து அவர் டான்ஸ் ஆடியது ரொம்ப அபூர்வமானது. ஆனாலும், தனது நடனத்தையே மக்களுக்கு பிடித்தமானதாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்.
1968-ம் ஆண்டு தயாரிப்பாளர் ஜி.என். வேலுமணியின் சரவணா ஸ்கிரீன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சங்கர் இயக்கத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் குடியிருந்த கோயில் திரைப்படத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குநர் சங்கர், எம்.ஜி.ஆரிடம் சென்று இந்த படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் ஒரு பாடல் வருகிறது. அந்த பாடலுக்கு நீங்கள் பஞ்சாப் பங்காரா டான்ஸ் ஆட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அதெல்லாம் நமக்கு வராது என்று மறுத்திருகிறார். ஆனாலும், இயக்குநர் கேட்டதனால், சரி என்னுடன் ஆடும் நடிகை யார் என்று எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார். அதற்கு இயக்குநர் சங்கர், நடிகை விஜயலட்சுமிதான் டான்ஸ் ஆட உள்ளார் என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்ட எம்.ஜி.ஆர், அந்த நடிகையுடன் என்னால் டான்ஸ் ஆட முடியாது. அந்த அம்மா முறைப்பட டான்ஸ் கற்றுக்கொண்டவர். அவர் பிறக்கும்போதே காலில் சலங்கையைக் கட்டிக்கொண்டுதான் பிறந்தார் என்று சொல்கிற அளவுக்கு டான்ஸ் ஆடுவார். அதனால், என்னால் அவருடன் டான்ஸ் ஆட முடியாது என்று எம்.ஜி.ஆர் மறுத்திருக்கிறார்.
ஆனால், இயக்குநர் சங்கர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் பேசி சம்மதிக்க வைத்திருக்கிறார். எம்.ஜி.ஆர் சம்மதித்தாலும், 2 கண்டிஷன்களைப் போட்டுள்ளார். அது என்னவென்றால், முதல் கண்டிஷன் பாடல் காட்சியில் நடனம் ஆடுவதற்கு முன்பு எனக்கு ஒரு வாரம் அவகாசம் வேண்டும். 2வது கண்டிஷன், பாடல் காட்சியை படம்பிடித்த பிறகு எனக்கு அதைப் போட்டுக் காட்டிய பிறகுதான் வெளியிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இயக்குநர் சங்கரும் ஒப்புக்கொண்டார்.
எம்.ஜி.ஆர் அந்த ஒரு வார கால அவகாசத்தில், பங்காரா டான்ஸ் எப்படி ஆடுவது என்று பயிற்சியாளரிடம் நடனம் கற்றுக்கொண்டார். பிறகு அந்த படத்தில் பஞ்சாப் பங்காரா டான்ஸ் ஆடினார். அந்த பாடலும் எம்.ஜி.ஆரின் டான்சும் சிறப்பாக அமைந்தது. அந்தப் பாடல்தான், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் ஆலங்குடி சோமு எழுதிய ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்’ என்ற சூப்பர் ஹிட் பாடல் ஆகும். குடியிருந்த கோயில் படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. எம்.ஜி.ஆர் பங்காரா டான்சும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“