தமிழ் சினிமாவில் தனது இனிமையான பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கண்ணதாசன். ஒரு சூழ்நிலைக்கு பாடல் எழுத சொன்னால், தனது வாழ்க்கையின் அனுபவத்தையும் கலந்து ஹிட் பாடல்களாக கொடுக்கும் கண்ணதாசன், மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கு தனித்தனியாக தனது பாடல் வரிகள் மூலம் வெளிப்படுத்தியவர்.
சினிமாவில், இயக்குனர் தயாரிப்பாளர் திரைக்கதை ஆசிரியர், என பன்முக திறமை கொண்ட கண்ணதாசன், அரசியலிலும் தனக்கான தனி இடத்தை அமைத்துக் கொண்டிருந்தார். அதே சமயம் திமுக காங்கிரஸ் தமிழ் தேசிய கட்சி என பல அரசியல் கட்சிகளுடன் பயணித்த கண்ணதாசன், எம்.ஜி.ஆர் கருணாநிதி உள்ளிட்ட பலரையும் பல மேடைகளில் விமர்சித்துள்ளார். அதே சமயம் அவர்கள் தனது கட்சியில் இருக்கும்போது பாராட்டவும் தவறியதில்லை.
அதேபோல், வழக்கறிஞர், பத்திரிக்கயைாளர், இயக்குனர் கதாசிரியர் என பன்முக திறமை கொண்ட சோ’’ கண்ணதாசனின் நெருங்கிய நண்பரும் கூட. அரசியல் விமர்சகர் என்ற பட்டத்துடன் வலம் வந்த சோ’’ அரசியல் கருத்துக்களை யார் சொன்னாலும், தனது பார்வையில் அதை விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அப்படி ஒருமுறை, கருணாநிதி வின்சன்ட் சர்ச்சிலுக்கு நிகரான ஒரு ராஜதந்திரி என்று கண்ணதாசன் கூறியிருந்தார்.
கண்ணதாசனின் இந்த கருத்துக்கு சோ அடுத்த நாளே பதிலடி கொடுத்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு பின் சில மாதங்கள் கழித்து சோவுக்கு போன் செய்த கண்ணதாசன், அன்றைக்கு கருணாநிதி ஒரு ராஜதந்திரி என்று சொன்னதை விமர்சனம் செய்தீர்களே இன்று ஒரு விஷயம் நடக்க போகிறது. இது நடந்து முடிந்தவுடன் நான் சொன்ன கருத்து சரிதான் என்று நீங்களே எனக்கு போன் செய்து ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட சோ என்ன நடக்க போகுது என்று கேட்க, இன்று மதியம் எம்.ஜி.ஆர் திமுகவின் பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார். இதை கருணாநிதி செய்ய போகிறார் என்று சொல்ல, சோவுக்கு அதிர்ச்சி. ஆனால் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கினால் அது கருணாநிதிக்கு தான் பாதகமாக முடியும். எம்.ஜி.ஆர் பின்னாள் இருப்பது பக்தர்கள் கூட்டம்.
கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கருணாநிதி பக்கம் இருந்தாலும், அடிமட்ட தொண்டர்கள் எம்.ஜி.ஆர் பக்கம் தான். அதனால் இந்த நடவடிக்கை கருணாநிதிக்கு பாதகம் தான் என்று கூறியுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன் திமுக இல்லை என்றால் எம்.ஜி.ஆர் இல்லை இன்னும் 15 நாட்கள் அல்ல ஒரு மாதம் பொருந்திருந்து பாருங்கள். அதன்பிறகு நீங்களே என்னிடம் வந்து கருணாநிதி பற்றி நான் சொன்ன கருத்து சரிதான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்கு சோவும் ஒப்புக்கொண்ட நிலையில், அடுத்த ஒரு மாதத்தில் எம்.ஜி.ஆர் புதிய கட்சி தொடங்கிவிட்டார். அப்போது திமுக மற்றும் கருணநிதிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்ததை தொடர்ந்து சோவுக்கு போன் செய்த கண்ணதாசன் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.