/indian-express-tamil/media/media_files/2025/09/08/screenshot-2025-09-08-173511-2025-09-08-17-35-36.jpg)
உடலில் உண்டாகும் பல நோய்களுக்கு மருந்து நம் வீட்டிலேயே உள்ளது என்பது தெரியுமா? இன்று பலரும் ஹீமோகுளோபின் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும் போது அதை அதிகரிக்க விரும்பினால் முருங்கை இலை பெரிதளவு உதவும். தொடர்ந்து ஒரு மண்டலம் வீதம் இதை சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு கணிசமாக உயரும். அதற்கு முருங்கையை எப்படி சுவைபட சேர்ப்பது என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் எளிதாக கிடைக்கக்கூடிய இரும்பு சத்து, கால்சியம், பொட்டாசியம் , வைட்டமின் ஏ, சி நிறைந்த முருங்கை கீரையில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது.
பல மருத்துவ பண்புகளை உள்ளடக்கிய இந்த முருங்கை கீரையை கொண்டு சாம்பார், பொரியல், சட்னி, சூப் ஏன் பஜ்ஜி கூட செய்வார்கள். ஈசியாக கிடைப்பதாலோ என்னவோ பலர் இதை விரும்பி சாப்பிடுவது இல்லை. முருங்கை கீரை கொண்டு சாதகம், இட்லி, தோசைக்கு சேர்த்து சாப்பிட சுவையான முருங்கை கீரை துவையல் எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை - 2 கப்
புளி - பாதி எலும்பிசை அளவு
தேங்காய் பல் - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 8 பல்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புதினா இலை - சிறிதளவு
கல் உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
முதலில், எடுத்து வைத்துள்ள புளியை சூடான தண்ணீரில் போட்டு ஊறவைத்து வைக்க வேண்டும். அதன் பிறகு, முருங்கை கீரையை உருவி சுத்தம் செய்து நன்றாக தண்ணீரில் கழுவி, வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். பின்னர், அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும், அதில் உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும். பருப்புகள் சிவந்தவுடன், பூண்டு மற்றும் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய்களைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அதன் பிறகு நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி, வெங்காயம் லேசாக வண்ணம் மாறி வந்தவுடன் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
இதனுடன் நறுக்கிய தேங்காயைப் போட்டு நன்றாக கிளறவும். இப்போது, முன்பே சுத்தம் செய்து வைத்த முருங்கை கீரையை சேர்த்து, அதனுடன் மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கி, மிதமான தீயில் நன்கு வதக்கி விட வேண்டும். கீரை நன்றாக வதங்கியதும், அடுப்பை அணைத்து அதை முழுமையாக ஆறவிடுங்கள்.
பிறகு, ஆறிய இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் ஊறவைத்த புளி, அதன் தண்ணீர் மற்றும் சுவைக்கேற்ப உப்பும் சேர்த்து கொரகொரவென்று அரைத்தால், சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த முருங்கைக்கீரை துவையல் தயாராகி விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.