பாலிவுட் இசை அமைப்பாளர் கயாம் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக மும்பையில் நேற்றிரவு காலமானார். கயாம் அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் பிரிதம் சர்மா தனது அறிக்கையில், “மூத்த இசை அமைப்பாளர் கயாம் மரணமடைந்து விட்டார். 19/08/2019 அன்று இரவு 9.30 மணிக்கு மும்பையின் சுஜாய் மருத்துவமனையில் அவர் இயற்கை எய்தினார். வயோதிகம் தொடர்பான பிரச்னைகளால் சில நாட்களாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்” என தெரிவித்திருந்தார்.
கஸல் பாடகர் தலட் அஸீஸும் இந்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸிடம் உறுதிப்படுத்தினார். “கார்டியாக் அரெஸ்டால் இரவு 9.30 மணிக்கு கயாம் காலமானார், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 21 நாட்களுக்கு மேல் தைரியமாக போராடினார். நான் இப்போது மருத்துவமனையில் இருக்கிறேன்” என்றார் அஸீஸ்.
பழம்பெரும் இசையமைப்பாளரான கயாம் ஜூலை 28 அன்று நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 92 வயதான அவர் ஜுஹுவில் உள்ள சுஜாய் மருத்துவமனையில் சிகிச்ச்சை பெற்று வந்தார்.
கயாமின் இறப்பு செய்தி வெளிவந்த உடனேயே பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தத் தொடங்கினர். இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பல கலைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக கயாமை நினைவுக் கூர்ந்தனர்.
முகமது ஜாஹூர் கயாம் ஹாஷ்மி என்ற முழுப் பெயரைக் கொண்ட இவர், இந்தி திரைப்படத் துறையின் புகழ்பெற்ற இசையமைப்பாளராக விளங்கினார், ’உம்ராவ் ஜான்’ மற்றும் ’கபி கபி’ போன்ற படங்களின் மூலம் மிகவும் புகழ்பெற்றார்.
’பஜார்’ படத்தில் “டிகாயி டியே யுன்”, ’நூரியிலிருந்து’, “ஆஜா ரே”, ’கபி கபி’யிலிருந்து “தேரே செஹ்ரே சே”, ’உம்ராவ் ஜான்’ படத்திலிருந்து “ஆன்கான் கி” ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. 1961-ஆம் ஆண்டு வெளியான ’ஷோலா அவுர் ஷப்னம்’ திரைப்படம் தான் முதலில் அவரை புகழ் பெற செய்தது.
’உம்ராவ் ஜான்’ படத்திற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ’உம்ராவ் ஜான்’ மற்றும் ’கபி கபி’ ஆகியவற்றிற்கான ஃபிலிம்பேர் விருதையும் கயாம் பெற்றுள்ளார். அதோடு 2007 ஆம் ஆண்டில் ’சங்கீத் நாடக் அகாடமி’ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
தவிர 2011-ல் பத்ம பூஷண் விருதையும் இந்திய அரசு கயாமுக்கு வழங்கியுள்ளது.