Naane Varuven Movie Review | Dhanush | Selvaraghavan | நானேவருவேன்திரைப்படவிமர்சனம் | தனுஷ் | செல்வராகவன்: திருச்சிற்றம்பலத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தனுஷின் "நானே வருவேன்" திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு படம் தனது வித்தியாசமான, யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கும் தனுஷிற்கு இப்படம் மற்றுமொரு நடிப்பிற்கான வெற்றி. முதன்முறையாக வில்லனாக மிரட்டி இருக்கும் தனுஷின் நடிப்பு ரசிகர்களை கொண்டாட வைக்கிறது. மேலும் தனுஷின்,"கதை - திரைக்கதை" என்பதாலும் ,"செல்வா - யுவன்"கூட்டணி நீண்ட நாட்களுக்கு பிறகு இணைவதாலும் பலத்த எதிர்பார்ப்புகளுடன் திரையரங்கிற்கு வந்த ரசிகர்களுக்கு முதல் பாதி கொண்டாட்டமாகவும், இரண்டாம் பாதி ஏமாற்றமாகவும் அமைந்திருப்பதை மறுக்க முடியாது.
"செல்வராகவன்" படத்திற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படமாவது அவருக்கு "கம்-பேக்" திரைப்படமாக இருக்குமா? என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம். படம் தொடங்கிய முதல் காட்சியில் இருந்து ஒருவித ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ரசிகர்களுக்கு கொடுத்தது, அதை இடைவேளை வரை கடத்திச் சென்றிருக்கிறார்கள். இடைவேளையில் அறிமுகமாகும் வில்லன் தனுஷ் படத்திற்கான ஆர்வத்தை மேலும் மெருகேற்றி மிரட்டியிருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் வில்லன் தனுஷினுடைய காட்சிகள் ரசிப்பவையாக இருந்தாலும் பெரிய அளவில் சுவாரசியத்தை கொடுக்க தவறி இருக்கிறது.
படம் இப்படி தான் முடியப்போகிறது என்பதை எளிதாக யுகிக்கும்படியாக திரைக்கதை அமைந்துள்ளதால் இரண்டாம் பாதி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. சரி கிளைமேக்ஸ்ஸிலாவது ஏதாவது கைதட்டி,விசில் அடித்து கொண்டாடலாம் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு மற்றுமொரு தோல்வி. ஏற்கனவே தமிழ் சினிமாவிற்கு பழக்கப்பட்ட பழிவாங்கும் கதையில் சற்று "ஹாரர் - திரில்லரை" கலந்து கதை சொல்ல முயற்சித்து இருக்கிறார் செல்வராகவன். அது எந்தளவிற்கு படத்திற்கு கை கொடுக்கும் என்பதை வரும் நாட்களில் அறியலாம்.
யுவன் சங்கர் ராஜாவின் இசை பெருமளவில் எடுபடவில்லை என்றாலும் ஓரளவவிற்கு படத்திற்கு கை கொடுத்திருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவும், பாடல்களும் சுமார் ரகம். மொத்தத்தில் "நானே வருவேன்" இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil