Sivaji Ganesan Birthday: தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிக்க வரும் ஒவ்வொருவரும் தங்களது இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்வது நடிகர் சிவாஜி கணேசனை தான். தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான இவர், நடிப்புக்கான இலக்கணத்தையும் மிக நேர்த்தியாக வகுத்திருக்கிறார்.
எது நடிப்பு? எது உண்மை? எனத் தெரியாத அளவுக்கு சிவாஜி கணேசனின் நடிப்பு இருக்கும். உதாரணமாக ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் அத்தனை நேர்த்தியான பாவனைகளுடன் நாதஸ்வரம் வாசிப்பார். சிவாஜியைப் பற்றி தெரியாத யாராவது அந்தக் காட்சிகளைப் பார்த்தால், அவர் நிஜ நாதஸ்வர கலைஞர் என நினைத்துக் கொள்வார்கள். தனக்கு வழங்கப்படும் கதாபாத்திரத்திற்கு கொஞ்சமும் சேதாரம் ஏற்படாத வகையில் அதை செவ்வன செய்து முடிப்பது சிவாஜியின் பாணி.
சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக தஞ்சாவூரில் 1927-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பிறந்தார் சிவாஜி. கணேசமூர்த்தி என்பது இவரது இயற்பெயர். திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்த சிவாஜி, ”சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்தார். அவரது நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
பேரறிஞர் அண்ணாவுடன் சிவாஜி கணேசன்
சிவாஜி படங்களில் நுழைந்ததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. 1940, 1950-களில் தமிழ் திரைப்படங்களில் முதன்மை வேடங்களில் நடித்த நடிகர்கள் அனைவருமே தெலுங்கர்கள். தமிழில் அவர்களின் டயலாக்கோடு, நடிப்புப் பொருந்தவில்லை. இரண்டாவதாக, 1950-களில் சி.என். அண்ணாதுரை மற்றும் மு.கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் திராவிட இயக்கம் வளர்ச்சி பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது. அவர்களின் ஸ்கிரிப்டும், அதற்கு சிவாஜியின் நடிப்பும் தவிர்க்க முடியாத காம்போவாக அமைந்தது.
பிரபல இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு 1952-ம் ஆண்டு இயக்கிய ”பரசக்தி” என்ற தமிழ் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் தனது நடிப்பை தொடங்கினார். இதை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் பி. ஏ. பெருமாள் முதலியர் தயாரித்தார். தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் நடிக்கவிருந்த அந்தப் படத்தில், சிவாஜியை ஹீரோவாக போடும்படி, தயாரிப்பாளரிடம் அவரை பரிந்துரைத்தார் பெரியார். முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி எழுதிய இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று, சிவாஜிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இன்றும் நடிக்க வருபவர்கள் பராசக்தி படத்தின் வசனங்களை பேசி, நடித்துக் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
கலைஞர் கருணாநிதியுடன் சிவாஜி
அதோடு சிவாஜி கணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி தமிழ் சினிமாவில் நடிகர்கள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது! சினிமா உள்ளவரை என்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!
தவிர, சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்களும் ரசிகர்களும் சிவாஜி குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். “சிவாஜியின் படைப்புகளைப் போலவே, அவரது உடலும் என்றும் நிலைத்திருக்கும் என்று அவரது அப்பாவி ரசிகர்களைப் போலவே நானும் நம்பினேன். நடிகர் திலகம் என்கிற அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என நடிகர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.