நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் சசிகுமார், ஆர். சரவணன் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் தான் ’நந்தன்’. சுருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர்.
கதை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வணங்கான்குடி கிராமத்தில் பல வருடங்களாக ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறார் ஆதிக்க சாதியைச் சேர்ந்த கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்). அதனை கவுரமாக கருதும் கோப்புலிங்கம், மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்துக்கு வர விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இந்த சூழலில் அடுத்த பஞ்சாயத்து தலைவர் யார் என்கிற கேள்விக்கு, கோப்புலிங்கமே முன்மொழியப்படுகிறார். ஆனால், எதிர்பார்க்காததுபோல் அந்த ஊரில் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினராக இருக்க வேண்டும் என ரிசர்வ் பகுதியாக அறிவிக்கப்படுகிறது.
இதனால் கோபமடையும் கோப்புலிங்கம், தனது வீட்டில் வேலை செய்து வரும் தான் சொல்வதை கேட்டு நடக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த கூல்பானை என்ற அம்பேத்குமாரை (சசிகுமார்) தலைவர் போட்டிக்கு நிற்க வைக்கிறார்.
அம்பேத்குமார் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டாரா? இந்த சாதிய அடக்குமுறைகள் அம்பேத்குமாரை என்னென்ன செய்கின்றன? ஆதிக்க வர்க்கத்திற்கு பதிலடி கொடுத்தாரா? என்பதே நந்தனின் கதை.
படத்தின் பிளஸ், மைனஸ்
சமூக நீதி, சாதிய கொடுமைகள் என ஆண்டாடு காலமாக நிகழும் அடக்குமுறையை பேச வேண்டும் என முக்கியமான பிரச்னையைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் இரா. சரவணன். அதற்கு கச்சிதமாக பொருந்தி போகிறார் சசிகுமார். விசுவாசியாக அழுக்கு துணியோடு இருப்பதும் ஊர் தலைவராக வெள்ளை வேட்டி சட்டையில் வரும் போதும், ஊருக்கு முன் அவமானப்படும் இடங்களிலும் தேர்ந்த நடிகர் என நிரூபிக்கிறார்.
அசால்ட்டான நடையிலும், கறாரான உடல்மொழியிலும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார் பாலாஜி சக்தவேல். அதேபோல் சசிகுமாரின் மனைவியாக வரும் சுருதி யதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். இயக்குனர் சில இடங்களில் அழுத்தமான அரசியல் வசனங்கள் மூலம் கைத்தட்டலை பெறுகிறார்.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை படத்துக்கு பலம். ஆர்.வி. சரனுடைய ஒளிப்பதிவு அந்த ஊரின் இயல்பை திரையில் பிரதிபலிக்கிறது. படத்தின் இறுதியில் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி சாட்சியங்களை பதிவு செய்திருப்பது யதார்த்த சூழலின் அப்பட்டமான வெளிப்பாடு..
ஆனால், நந்தன் திட்டமிட்டபடி முழுமையான திரைப்படமாக உருவாகவில்லை. திரைக்கதையும் உருவாக்கமும் படத்தின் பெரிய பலவீனம். உணர்ச்சிகளைத் தூண்டியிருக்க வேண்டிய காட்சிகள்கூட வெறுமனெ கடந்து செல்கின்றன. மொத்தத்தில் ஒருமுறை பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“