/indian-express-tamil/media/media_files/2025/09/26/robo-nanjil-2025-09-26-15-58-20.jpg)
திரைத்துறையில் தனது தனித்துவமான நகைச்சுவை மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நடிகர் ரோபோ சங்கர் அண்மையில் திடீரென உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரோபோ சங்கரின் நெருங்கிய நண்பரும் கலைஞருமான நாஞ்சில் விஜயன் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி, அவரது குடும்பம் எதிர்கொண்ட துயரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து பலரின் மனதை நெகிழச் செய்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் ரோபோ சங்கரின் உடல்நலக் குறைவுக்கு அவரது குடிப்பழக்கமே முக்கிய காரணம் என்று பலரும் பரப்பி வந்தனர். இந்த வதந்திக்குப் பதிலளித்த நாஞ்சில் விஜயன், "குடிப்பழக்கம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம், ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை. அவர் ஒரு மேடை கலைஞராக இருந்தபோது உடம்பில் பூசிக்கொண்டிருந்த பெயிண்ட், ஓய்வில்லாத அவரது உழைப்பு என அனைத்தும் சேர்ந்துதான் அவரது உடல்நலப் பாதிப்பிற்கு வழிவகுத்தன," என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோபோ சங்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணத்தின் விளிம்புக்கே சென்றார். அப்போது அவரது மனைவி பிரியங்கா போராடி அவரை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்டு வந்தார். ஆனால், குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்த அவரை எந்தத் தொலைக்காட்சியும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்று நாஞ்சில் விஜயன் வருத்தத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், கடந்த இரண்டு வருடங்களாக ரோபோ சங்கர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். அவர் வசித்து வந்த வளசரவாக்கம் வீட்டிற்கு மட்டும் மாதம் ஒரு லட்சம் ரூபாய் இ.எம்.ஐ செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்திருக்கிறது. இந்தக் கடுமையான சூழ்நிலையிலும் அவர் ஓடி ஓடி உழைத்திருக்கிறார்.
மருத்துவச் செலவுகளுக்காக ரோபோ சங்கர் குடும்பம் அனுபவித்த போராட்டங்களை நாஞ்சில் விஜயன் கண்கலங்கப் பகிர்ந்து கொண்டார். "ரோபோ சங்கர் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்தபோதே ஐம்பது லட்ச ரூபாய்க்கும் மேல் செலவாகிவிட்டது. அவ்வளவு பணத்தைச் செலவு செய்துதான் பிரியங்கா அவரை மீண்டும் வீட்டிற்குக் கொண்டு வந்தார். மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவச் செலவிற்காக மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
அவரது மனைவி பிரியங்கா அணிந்திருந்த தாலி உட்பட அத்தனை நகைகளையும் மருத்துவமனையிலேயே கழட்டிக் கொடுத்தார். அதேபோல, அவரது கணவர் கார்த்திக்கும் தனது கையில் அணிந்திருந்த செயின், மோதிரம் என அனைத்தையும் கழட்டிக் கொடுத்துதான் மருத்துவச் செலவு செய்யப்பட்டது. அனைத்தையும் அருகில் இருந்து கண்கூடாகப் பார்த்தவன் நான்," என்று மனம் உருகிப் பேசியுள்ளார்.
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா அதிக வருமானம் இல்லாத காரணத்தினால் பல பிரமோஷன் வீடியோக்களைச் செய்து வருகிறார் என்று சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சனங்கள் வைக்கின்றனர். அது குறித்துப் பேசிய நாஞ்சில் விஜயன், "ஒரு குடும்பம் மகிழ்ச்சியாகத் தோன்றுகிறது என்பதற்காக அவர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று நினைத்துவிடக் கூடாது. ரோபோ சங்கர் குடும்பம் மிகப்பெரிய கடன் சுமையில் இருக்கிறது," என்று கூறி இந்திரஜாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதேபோல, ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா இறுதி ஊர்வலத்தில் ஆடியதை சிலர் விமர்சனம் செய்தனர். அதற்கு விளக்கமளித்த நாஞ்சில் விஜயன், "இறுதி ஊர்வலத்தில் ஆடியது வேதனையின் உச்சத்தில் ஆடினார். தனது கணவருக்குப் பிடித்ததை கடைசியாகச் செய்தார். அதைத் தமிழ் மக்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்," என்று பிரியங்காவின் செயலுக்கு விளக்கமளித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.