Samantha's One Bucket Challenge: தண்ணீர் தட்டுபாடு நாட்டிற்கே பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. நிலத்தடி நீர் குறைதல் மற்றும் மழை இல்லாததன் காரணமாக கடுமையான நீர் தட்டுப்பாட்டை சென்னை சந்தித்து வருகிறது.
தண்ணீரைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருத்தல் மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதோடு மற்ற ஊர்களின் தண்ணீரை நம்பியிருக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
நம்மை போல், ஹைதராபாத்தும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. அங்கு தண்ணீரை மிச்சப்படுத்துவதற்கும் வீணாக்காமல் இருப்பதற்கும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில் நடிகை சமந்தா ’ஒன் பக்கெட் சேலஞ்ச்’ என்ற ஒன்றை முன்னெடுத்துள்ளார். ஒரு நாள் முழுவதும் ஒரு வாளி தண்ணீரை பயன்படுத்துவது தான் இதன் சவால். இந்த சவாலில் வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் பங்கேற்கிறார்.
இது குறித்து ட்விட்டரில் தெரிவித்திருக்கும் சமந்தா, ”ஞாயிற்றுக்கிழமை இந்த சவாலில் பங்கேற்க என்னுடன் யாரெல்லாம் வருகிறீர்கள்? ’ஒன் பக்கெட் சேலஞ்ச்’ (படங்களுடன்), நீண்ட நேர குளியல் வேண்டாம், வண்டி கழுவ வேண்டாம், முகத்தை கழுவும் போது பைப்பை திறந்து விடாதீர்கள். எனது பக்கெட் சேலஞ்ச் படங்களை இங்கே பதிவிடுகிறேன் (ஏமாற்ற மாட்டேன்) #everydropcounts " எனக் குறிப்பிட்டு மற்றவர்களையும் இந்த சவாலை ஏற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.