New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/08/batsha-2025-07-08-12-29-21.jpg)
"ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" என்ற பன்ச் டயலாக் ரஜினிகாந்தின் பாட்ஷா பாத்திரத்திற்கு தனி அடையாளத்தையும், அழுத்தத்தையும் கொடுத்தது என்பதில் சந்தேகமில்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில், 'பாட்ஷா' திரைப்படம் மைல்கல். குறிப்பாக, அதில் வரும் "ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" என்ற பன்ச் டயலாக் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்று. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டயலாக் எப்படி உருவானது என்பதை பற்றி, பாட்ஷா படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
பாட்ஷா படத்தின் முதல் பாதி படப்பிடிப்பு சென்னையின் கிரீன்பார்க் ஹோட்டல் அருகேயுள்ள செட்டில், மாணிக்கத்தின் வீடாகக் காட்சிப்படுத்தப்பட்டது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, அண்ணாமலை படத்தில் வந்ததுபோல பன்ச் டயலாக் 'பாட்ஷா'விலும் அமையுமா? என்று தொடர்ந்து விவாதித்து வந்தோம். ஆனால், எந்தவொரு டயலாக்கும் சரியாக அமையாமல் தேடல் தொடர்ந்ததாக டுரீங் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலில் மைல்கல் நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கிருஷ்ணா குறிப்பிட்டார்.
படத்தின் இடைவேளை காட்சியில், ஆனந்தராஜை அடித்த பிறகு மாணிக்கத்தின் உண்மை முகம் வெளிப்படும் தருணத்தில்தான் பயங்கரமான டயலாக் வர வேண்டியிருந்தது. அந்த காட்சியை படமாக்கும் முன், ஒரு இரவு ரஜினிகாந்த் திடீரென தனது யோசனையை பகிர்ந்து கொண்டோம். "ஒரு வாட்டி சொன்னா நூறு வாட்டி சொன்ன மாதிரி" என்று அவர் சொல்ல, "சார், வித்தியாசமா இருக்கு, ஒரு பவர் இருக்கு இதுல, நல்லா இருக்கு!" என்று அவர்களும் ஆச்சரியத்துடன் பாராட்டியதாக சுரேஷ் கிருஷ்ணா கூறினார்.
ஷாட் எடுப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன், ரஜினிகாந்த் மீண்டும் பாலகுமாரை அழைத்து, "பாலகுமார், 'ஒரு வாட்டி' பெட்டரா, 'ஒரு தடவை' பெட்டரா?" என்று கேட்டார். "வாட்டியை விட 'தடவை' நல்லா இருக்கு. ஒரு வெயிட் இருக்கிற மாதிரி இருக்கு" என்று பாலகுமார் யோசனையைத் தெரிவித்தார். ரஜினிகாந்தும் அதற்கு ஒப்புக்கொண்டு, "ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" என்ற டயலாக்கை ஷாட்டுக்கு முன் சரியான உச்சரிப்பில் சொல்லி முடித்துள்ளார்.
டயலாக் சொன்ன அடுத்த நொடியே, செட்டில் இருந்த ஜனகராஜ், "அண்ணா, இது நல்லா இருக்கே!" என்று வியந்துள்ளார். அங்கிருந்த அனைவருமே ஒருவித இன்ட்ரஸ்டிங்கான ரியாக்ஷனைக் கொடுத்துள்ளனர். ஆனால், அங்கிருந்த கேமரா அசிஸ்டன்ட்களின் ரியாக்ஷன் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. டயலாக் கேட்ட உடனேயே, "டேய் ஒரு டேக் குடுடா, ஒரு தடவை சொன்னா நூறு தடவை!" என்று ஒருவரையொருவர் பார்த்து பேசியுள்ளனர். இந்த டயலாக் உடனடியாக வைரலானது. படக்குழுவினருக்கே ஒரு திருப்தியைத் தந்ததாக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.