தெலுங்கு திரைப்படமான ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் ஆலியா பட், ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர், ஸ்ரேயா ஆகியோர் நடித்த படம் ‘ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போரட்ட வீரர்களான சீதாரராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோரின் நட்பை மையமாகக்கொண்டு இந்த படத்தின் கதை உருவானது. இந்த படத்திற்கு உலக அளவில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார்.
95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில் சிறந்த பாடல் பிரிவில் ’நாட்டு, நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் இந்த பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது குறிப்பிடதக்கது.
பல ஆங்கில பாடலுக்கு மத்தியில் இந்த பாடலை ஆஸ்கர் தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது. ஆஸ்கர் விருது விழாவில் இந்த பாடல் அரங்கேற்றப்பட்டது. இதற்கான அறிமுகத்தை நடிகை தீபிகா படுகோனே வழங்கினார். இந்த பாடல் முடிந்ததும், ஆஸ்கர் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் எழுந்து நின்று கைகளை தட்டி வரவேற்றனர்.
இந்த பாடலின் நடனமும் மிகவும் பிரபலமானது, இதை நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் இயக்கினார். இந்த அனுபவம் தொடர்பாக அவர் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கொடுத்த பேட்டியில் ‘நான் இதுவரை 1000 பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி உள்ளேன். ஆனால் எந்த பாடலும் ஆஸ்கருக்கு சென்றதில்லை. இது ’ஆர்.ஆர்.ஆர்’ படம் மூலமாக நடந்துள்ளது. இதற்கு முதல் முக்கிய காரணம் ராஜமவுலிதான். அவரின் கடின உழைப்புத்தான் காரணம் ‘ என்று அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் இயக்குநர் ராஜமவுலி பேசுகையில், ‘ கடினமான விஷயத்தைதான் நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் செய்துள்ளார். அனைவரும் நிகழ்த்தக்கூடிய வகையில் மிகவும் சுலபமான நடன அசைவுகள் வேண்டும் என்று நான் கேட்ருந்தேன். நாட்டு நாட்டு’ வரிகளுக்கு அவர் 100 வெவ்வேறு டான்ஸ் ஸ்டெப்புகளை எனக்கு நிகழ்த்திக்காட்டினார். எல்லா புகழும் அவருக்கே’ என்று கூறினார்.
இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணியுடன், பாடலை எழுதிய சந்திரபோஸும் இணைந்து பெற்றுக்கொண்டனர். அப்போது இசையமைப்பாளர் கீரவாணி பாடல் பாடி ராஜமவுலிக்கு நன்றி தெரிவித்தார்.