இந்தியாவில் செயல்படும் நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற அனைத்து ஓடிடி (Over-The-Top) மற்றும் பிற ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் மத்திய அரசு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த தளங்களில் பாகிஸ்தானில் இருந்து உருவாகும் எந்தவொரு திரைப்படங்களாகட்டும், தொலைக்காட்சி தொடர்களாகட்டும், பாடல்களாகட்டும் அல்லது போட்காஸ்ட் போன்ற ஒலி பதிவுகள் எதுவாக இருந்தாலும் உடனடியாக நீக்க வேண்டும் என்று கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Govt asks OTT, streaming platforms to immediately pull Pakistan-origin content
இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இன்று (மே 08) இந்த அறிவுறுத்தலை வெளியிட்டது. இதற்கு முந்தைய நாள், ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவுறுத்தலில், இந்தியாவில் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களுக்கும், குறிப்பாக பஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானில் உள்ள அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத அமைப்புகளின் எல்லை தாண்டிய தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தா அடிப்படையிலோ அல்லது வேறு எந்த முறையிலோ வழங்கப்பட்டாலும், பாகிஸ்தானை தோற்றுவாயமாகக் கொண்ட வலைத் தொடர்கள், திரைப்படங்கள், பாடல்கள், போட்காஸ்ட் மற்றும் பிற ஸ்ட்ரீமிங் ஊடக உள்ளடக்கங்களை உடனடியாக நிறுத்துமாறு ஓடிடி தளங்கள், ஊடக ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "இந்தியாவில் நடத்தப்பட்ட பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத அமைப்புகளுடன் எல்லை தாண்டிய தொடர்பு இருப்பது உறுதியாக நிறுவப்பட்டுள்ளது. சமீபத்தில், 22.04.2025 அன்று, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பல இந்தியர்கள் மற்றும் ஒரு நேபாள குடிமகன் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்" என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலுக்கு அடிப்படையாக தகவல் தொழில்நுட்ப (இடைத்தரகர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகம் நெறிமுறைகள்) விதிகள், 2021ல் உள்ள "நெறிமுறைகள்" குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விதிகளின்படி, ஒரு உள்ளடக்கத்தை வெளியிடவோ அல்லது காட்சிப்படுத்தவோ முடிவு செய்யும் போது, வெளியீட்டாளர் சில காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அது தொடர்பாக "முறையான எச்சரிக்கை மற்றும் விவேகத்தை கடைபிடிக்க வேண்டும்" என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, "இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதிக்கும் உள்ளடக்கம்", "மாநிலத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், ஆபத்து அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம்", "இந்தியாவின் நட்பு நாடுகளுடனான உறவுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம்" மற்றும் "வன்முறையைத் தூண்டக்கூடிய அல்லது பொது ஒழுங்கை சீர்குலைக்கக்கூடிய உள்ளடக்கம்" ஆகியவை இதில் அடங்கும்.
மேலும், தகவல் தொழில்நுட்ப விதிகளின் ஒரு பிரிவை மேற்கோள் காட்டி அந்த அறிவுறுத்தல் கூறுகிறது, "இடைத்தரகர்கள் தாங்களாகவே நியாயமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், மேலும் தங்கள் கணினி வளத்தைப் பயன்படுத்தும் பயனர்கள் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது இறையாண்மை, வெளிநாட்டு அரசுகளுடனான நட்புறவு அல்லது பொது ஒழுங்கு ஆகியவற்றை அச்சுறுத்தும் எந்த தகவலையும் ஹோஸ்ட் செய்யவோ, காட்டவோ, பதிவேற்றவோ, மாற்றவோ, வெளியிடவோ, அனுப்பவோ, சேமிக்கவோ, புதுப்பிக்கவோ அல்லது பகிரவோ கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.