Pa.Ranjith’s Next Titled as Salpetta Parambarai: இயக்குநர் பா. ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, ‘கபாலி’ மற்றும் ‘காலா’ என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்தார். இதற்கடுத்து தனது நீலம் புரொடக்ஷன் மூலம் ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தயாரித்தார். இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.
இதற்கிடையே பழங்குடி இனத்தைச் சேர்ந்த பிரபல சுதந்திர போராளி ’பிர்சா முண்டாவின்’ வாழ்க்கை வரலாற்றை இந்தியில் இயக்க கையெழுத்திட்டார். பல்வேறு காரணங்களால், இந்தப் படம் தொடங்குவதற்கு தாமதமாகி வருகிறது. இந்நிலையில் அவர் ஒரு தமிழ் படத்தை இயக்கிட முடிவு செய்திருப்பதை முன்பே குறிப்பிட்டிருந்தோம்.
வட சென்னை பின்னணியில் குத்துச் சண்டையை மையமாக வைத்து, த்ரில்லர் களத்தில் அந்தப் படத்தை இயக்குகிறாராம் ரஞ்சித். இந்தக் கதையில் ஆர்யா ஹீரோவாக நடிக்க, சத்யராஜ், தினேஷ், மற்றும் கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்களாம். அதோடு இந்தப் படத்துக்கு ‘சல்பேட்டா பரம்பரை’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
விரைவில் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டு படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.