/indian-express-tamil/media/media_files/2025/07/31/thimsu-kattai-2025-07-31-13-41-52.jpg)
புகைப்படம்: ட்விட்டர்
நடிகர் விஜய்யின் திருமலை திரைப்படத்தில் இடம்பெற்ற திம்சு கட்டை மற்றும் கில்லி படத்தில் இடம்பெற்ற இந்த நட போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா ஆகிய இரு பாடல்களும் உருவான விதம் குறித்து பாடலாசிரியர் பா. விஜய் கலாட்டா தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பா. விஜய் இந்த இரண்டு பாடல்களையும் எழுதியதற்கான பின்னணியைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பாடலாசிரியர் பா.விஜய்யின் வரிகள் எளிமையாக இருந்தாலும், ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்துபவை. மக்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து கருப்பொருட்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை கவிதைகளாகவும், பாடல்களாகவும் மாற்றுவதில் அவர் தனித்துவமானவர்.
பா.விஜய் பாடலாசிரியராக மட்டுமின்றி, ஞாபகங்கள், இளைஞன், ஸ்ட்ராபெரி, நையப்புடை, ஆருத்ரா போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். 'ஸ்ட்ராபெரி' மற்றும் 'ஆருத்ரா' ஆகிய திரைப்படங்களை இயக்கி, தயாரித்துள்ளார். இப்படியாக அவர் விஜய்க்கு எழுதிய இரண்டு பாடல்களும் எப்படி உருவானது என்று அவர் கூறியுள்ளார்.
பாடலாசிரியர் பா. விஜய், தன் வீட்டருகே நடந்துகொண்டிருந்த ஒரு கட்டிட வேலைப்பாட்டைப் பார்த்தபோது, அங்கு வேலை செய்துகொண்டிருந்த மேஸ்திரி, 'கட்டிடத்தை சமன் செய்வதற்கு திம்சு கட்டை' என்று கேட்டதைச் செவியுற்றார். அந்த வார்த்தை அவருடைய கவனத்தை ஈர்க்க, 'திம்சு கட்டை' என்பது ஒரு புதுமையான வார்த்தையாகவும், நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்றதாகவும் அவருக்குத் தோன்றியது.
'நாட்டுக்கட்டை' என்று சொல்வதைப் போலவே, 'திம்சு கட்டை' என்ற வார்த்தையையும் பாடலில் பயன்படுத்தலாம் என்று கருதி, அவர் அந்தப் பாடலை எழுதினார். இந்தப் பாடலை இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது என்று பா. விஜய் குறிப்பிட்டுள்ளார். இந்த வரிகள் இப்படித்தான் வந்ததே தவிர இதை நான் ஜோதிகாவிற்காக எழுதவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதேபோல, கில்லி படத்தில் இந்த நட போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்ற பாடலின் வரிகளும் ஒரு போராட்டத்தின்போது உருவானவை. தனது அம்மா ஆசிரியராக இருந்தபோது நடந்த ஒரு போராட்டத்தின்போது, 'இந்தப் படப் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா' என்ற முழக்கத்தை அவர் கேட்டார். அந்த வரிகள், இந்தப் பாடலுக்கான கருவாக அமைந்தன என்று பா. விஜய் விளக்கியுள்ளார். இவரது பாடல்கள் அர்த்தமுள்ள, புதுமையான மற்றும் எளிமையான வரிகளால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இவரது பாடல்களுக்கு இளைஞர்கள் இன்னும் வைப் செய்து கொண்டிருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.