பாபு
பக்கா, தியா, பாடம் ஆகிய தமிழ்ப்படங்களுடன் அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார் ஆங்கிலப் படம், சென்ற வாரம் வெளியானது. இதில் யாருக்கு வெற்றி?
சந்தேகமில்லாமல் அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார் திரைப்படத்துக்குதான். தமிழ்ப்படங்களை தனது வசூலால் சிதறடித்துள்ளது இந்த ஆங்கிலப்படம்.
பக்கா படத்தின் போஸ்டர்
விக்ரம் பிரபு இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் பக்கா படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே படத்தின் தோல்வி உறுதியானது. அத்தனை அமெச்சசூர்த்தனமான படமாக்கல். சென்ற வருடம் வெளியான முத்துராமலிங்கத்துக்கு சற்றும் குறைவில்லாத படம் பக்கா. முதல் வார இறுதியில் 153 திரையிடல்களில் சென்னையில் 31 லட்சங்களை இந்தப் படம் வசூலித்துள்ளது. பக்காவின் தரத்துடன் ஒப்பிட்டால் இது அதிகபட்சமான வசூல். பாடம் பாக்ஸ் ஆபிஸ் பக்கத்திலேயே இல்லை.
ஏ.எல்.விஜய் நடிப்பில் சாய் பல்லவி நடித்த படம் தியா. விஜய் படம் வருகையில் அந்தப் படம் எந்த வெளிநாட்டு படத்தின் காப்பி என்று ஆராய்வதில் ரசிகர்களுக்கு ஓர் ஆர்வம். தியா, தி அன்பார்ன் திரைப்படத்தின் மேலோட்டமான தழுவல் என்று செய்தி வெளியாகி காய்வதற்குள் சந்திரகுமார் என்ற உதவி இயக்குனர், இது என்னுடைய கதை என்று புகார் அளித்துள்ளார். கருவில் அழிக்கப்பட்ட குழந்தை ஐந்து வருடம் கழித்து ஐந்து வருட குழந்தைக்குரிய தோற்றத்துடன் பழிவாங்கும் பேய் கதை. படம் சென்னையில் முதல் மூன்று தினங்களில் 177 திரையிடல்களில் சுமார் 47.70 லட்சங்களை வசூலித்துள்ளது. சுமாரான வசூல்.
தியா படத்தில்...
இரண்டு வாரங்கள் முன்பு வெளியான மெர்க்குரி, சென்னையில் இதுவரை 2.09 கோடிகளும், பரத் அனே நேனு தெலுங்குப் படம் 2.10 கோடிகளும் வசூலித்துள்ளன. நேரடித் தமிழ்ப் படமான மெர்க்குரியை பரத் அனே நேனு வீழ்த்தியுள்ளது. மேலும், யுஎஸ்ஸில் பரத் அனே நேனு இதுவரை 20.57 கோடிகளும், மெர்க்குரி 52.42 லட்சங்களும் மட்டுமே வசூலித்துள்ளன.
ஆனால், அட்டகாசம், அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார். முதல் மூன்று தினங்களில் சென்னையில் 405 காட்சிகளில் 2.56 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த வருடம் வெளியான படங்களில் சென்னையில் அதிக ஓபனிங்கை பெற்றது சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம். ஜனவரியில் வெளியான இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 2.38 கோடிகள் வசூலித்ததே 2018 இன் ஓபனிங் வசூல் சாதனையாக இருந்தது. அதனை அவெஞ்சர்ஸ் முறியடித்துள்ளது. இந்த ஆங்கிலப் படம் ஓடுகிற வேகத்தைப் பார்த்தால் ஆறு கோடிகளை சென்னையில் அனாயாசமாக கடக்கும் என்கிறார்கள்.