பார்வையற்ற சஹானா என்ற பெண், விக்ரம் நடித்திருக்கும் 'கோப்ரா' படத்தின் ’தும்பி துள்ளல்’ என்ற பாடலை கீ போர்டில் வாசித்திருந்தார். இதனைப் பார்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அவரை ட்விட்டரில் பாராட்டியிருந்தார். தற்போது மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ரஜினிகாந்தின் எண்ட்ரி பாடலான மரண மாஸின் ஒரு பகுதியை வாசித்துள்ளார்.
கைகள் இல்லாத அந்த இளைஞர் கீ போர்டு வாசிக்கும் வீடியோவை கோபால் என்ற ரஜினி ரசிகர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். "திறமைக்கான அற்புதமான காட்சி. ஒவ்வொரு மனிதனும் கொண்டிருக்க வேண்டிய தன்னம்பிக்கை மற்றும் பாஸிட்டிவிட்டிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. திறமைக்கு எல்லைகள் இல்லை, இதைப் பார்க்கும் போது கண்ணீர் வருகிறது. அவரது திறமையைப் புகழ்ந்து பேச சிறிது நேரம் ஒதுக்குங்கள்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் கவனத்தை ஈர்க்க அவர் ட்விட்டரில் டேகும் செய்திருந்தார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இளைஞரின் திறமையை ஒப்புக் கொண்டு, 'மரண மாஸ்' என்ற தலைப்பில் அந்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார்.
இதற்கிடையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படத்தின் வெளியீட்டுக்காக கார்த்திக் சுப்பராஜ் காத்திருக்கிறார். பூட்டுதல் முற்றிலுமாக நீக்கப்பட்டதும், படப்பிடிப்புக்கு அரசாங்கம் அனுமதி அளித்ததும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ‘அண்ணாத்த’ படத்தில் கலந்துக் கொள்வார். இதனை இயக்குநர் சிவா இயக்குவது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”