Advertisment

விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் ஏ.ஐ மூலம் நடிக்கும் விஜயகாந்த்; பிரேமலதா தகவல்

விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் தோன்றுகிறார்; பிரேமலதா தகவல்

author-image
WebDesk
New Update
vijay goat and Vijayakanth

விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் தோன்றுகிறார்; பிரேமலதா தகவல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் விஜய் நடித்து வரும் ‘கோட்’ திரைப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் செயற்கை நுண்ணறிவு மூலம் இடம்பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

Advertisment

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தி கோட் 'GOAT'. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். விஜய் 2 வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் அதிக பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. 

இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் முதல் சிங்கிளான ‘விசில் போடு’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தநிலையில், கோட் படத்தில் ஏ.ஐ மூலம் நடிகர் விஜயகாந்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த், “கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ஐந்து, ஆறு முறை எங்கள் வீட்டுக்கு வந்து பேசினார். அதற்கு முன்பே என் மகன் சண்முகபாண்டியனிடமும் இது குறித்து அவர் பேசியிருந்தார் பிரச்சாரத்தின் நடுவே நான் சென்னை சென்றபோது, என்னை நேரில் சந்தித்த வெங்கட் பிரபு, ‘தி கோட்’ திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்தை ஒரு காட்சியில் நாங்கள் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார்.

விஜய்யும் தேர்தலுக்குப் பிறகு என்னை சந்திப்பதாக கூறியிருந்தார். இன்று விஜயகாந்த் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில் இருந்துதான் நான் யோசிக்க வேண்டும். அவர் இருந்திருந்தால் அவர் விஜய்க்கு என்ன சொல்லியிருப்பார்? ‘செந்தூரப் பாண்டி’ படத்தில் விஜய்யை கேப்டன் அறிமுகப்படுத்தியது உலகத்துக்கே தெரியும். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதும், விஜய் மீதும் அவருக்கு எப்போதும் மிகப்பெரிய பாசம் உண்டு. எத்தனையோ இயக்குநர்கள் காத்திருந்தபோதும் 17 படங்கள் விஜயகாந்தை வைத்து எஸ்.ஏ.சி இயக்கி இருக்கிறார். அதனால் எப்போதும் அவர் மீது விஜயகாந்துக்கு மரியாதை உண்டு.

எனவே இந்த படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் கேப்டனை மீண்டும் கொண்டு வருவது குறித்து அவர்கள் கேட்கும்போது, அவர் இடத்தில் இருந்து நான் யோசிக்கிறேன். விஜயகாந்த் இருந்திருந்தால் கண்டிப்பாக மறுப்பு தெரிவித்திருக்க மாட்டார். விஜய் என்னை வந்து சந்திக்கும்போது நல்ல முடிவாக கூறுகிறேன் என்று சொல்லி இருக்கிறேன். வெங்கட் பிரபுவை எனக்கு சின்ன வயதிலிருந்தே தெரியும். எனக்கு திருமணம் ஆன நாளிலிருந்து இளையராஜா குடும்பத்துடன் நான் பழகி இருக்கிறேன். உனக்கும் விஜய்க்கும் என்னால் ‘நோ’ சொல்ல முடியாது என்று வெங்கட் பிரபுவிடம் கூறினேன்” இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கோட் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. அதன்பிறகு சென்னை வரும் விஜய், பிரேமலதா விஜயகாந்தை சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment