பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா நிறைய சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். சமீபமாக அவர் மாட்டிக் கொண்டுள்ள சர்ச்சை, புகைப்பிடித்தலால் வந்த வினை.
கடந்த 18-ம் தேதி தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரியங்கா சோப்ரா. மியாமியில் உள்ள ஒரு சொகுசு கப்பலில் கணவர் நிக் ஜோனஸ், தாய் மதுசோப்ரா மற்றும் நண்பர்களுடன் அந்த நாளை வெகு விமர்சையாகக் கொண்டாடினார். அதன் படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்நிலையில் பார்ட்டி மூடில் இருந்த பிரியங்கா சோப்ரா சிகரெட் பிடிக்க, அருகில் இருந்த அவரது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் தாய் மதுசோப்ரா ஆகியோர் சிகார் (லார்ஜ் சிகரெட்) புகைத்தனர். இந்தப் படங்கள் வெளியானது தான் தாமதம், உடனே அவரை ட்ரோல் செய்யத் துவங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
பிரியங்காவின் பழைய ட்வீட்
காரணம் கடந்த தீபாவளிக்கு சில நாட்கள் முன்பு பதிவோடு இணைந்த வீடியோ ஒன்றையும் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் பிரியங்கா. அதில் தம்மை நன்கு தெரிந்தவர்களுக்கு, தாம் ஒரு ஆஸ்துமா நோயாளி என்பது தெரியும் என்றும், இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. ஆஸ்துமா தன்னை ஆட்கொள்வதற்குள், தான் அதனை கண்ட்ரோல் செய்ய வேண்டும் என்பது தனக்கு தெரியும் என்றும், தன்னுடைய வெற்றிகளை ஒருபோதும் ஆஸ்துமாவால் தடுக்க முடியாது என்றும் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
அதோடு தீபாவளியன்று பட்டாசு வெடிக்காமல், இனிப்பையும் அன்பையும் பரிமாறி கொண்டாடும்படியும் கேட்டுக் கொண்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஒரு நிமிடம் கலங்கித் தான் போனார்கள். காரணம், இந்திய சினிமாவைத் தாண்டி ஹாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு நாயகிக்கு இப்படியொரு நிலையா என மனம் வருந்தினர். ஆனால் சில நாட்களில் அவருக்கும் நிக் ஜோனஸுக்கும் திருமணம் நடந்த போது, பட்டாசுகளை கணக்கில்லாமல் வெடித்து அந்த ஊரையே புகை மண்டலமாக்கினார். இப்படி இரட்டை வேடம் போடுவது சரியா என்று அப்போதே ட்ரோல் செய்தனர் ரசிகர்கள்.
இதற்கிடையே தற்போது, ஆஸ்துமா நோயாளியான பிரியங்கா சிகரெட் புகைக்கும் படத்தைப் பதிவிட்டு, மீண்டும் ட்ரோல் செய்யத் துவங்கியுள்ளனர். பாஸிட்டிவ் வழியில் ஆஸ்துமா நோயாளிகளின் மன வலிமையை அதிகப் படுத்தும் பொறுப்புடன் நடந்துக் கொள்ளுங்கள் என்றும், இப்படியான தவறான முறையில் உதாரணமாக திகழாதீர்கள் என்றும் அவருக்கு அட்வைஸ் மழையும் பொழிந்து வருகிறார்கள் ரசிகர்கள்!