தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, போராட்டத்தை கைவிடுமாறு தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் இன்று சந்திப்பு மேற்கொண்டனர். சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியை அவர்கள் சந்தித்து பேசினர். தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். தயாரிப்பாளர் சங்கத்தினர் மேற்கொண்டுவரும் போராட்டம் குறித்து ரஜினியுடன் ஆலோசித்தனர். தயாரிப்பாளர் சங்கத்தினரின் காலவரையற்ற வேலைநிறுத்ததால் இந்த மாதம் 16ம் தேதி முதல் எந்த தமிழ் படமும் ரிலீசாகவில்லை. இதனால் படங்களின் படப்பிடிப்பும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஜினியை அவர்கள் சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது, தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போராட்டத்தை கைவிட்டு சினிமா பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என ரஜினிகாந்த் வலியுறுத்தி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.
அதுமட்டுமின்றி, ரஜினியின் காலா படத்தின் ரிலீஸ் தொடர்பாக, தயாரிப்பாளர்கள் சங்கம் தடையில்லா அனுமதிக் கடிதம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்தும், அவர்கள் ஆலோசனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.