Raadhika Sarathkumar: தொலைக்காட்சிகளில் சீரியலைத் தவிர, ரியாலிட்டி ஷோ-க்களும், கேம் ஷோ-க்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. பெரும்பாலான சேனல்களில் நடனம், பாடல் ஆகியவற்றை மையப்படுத்தி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வார இறுதி நாட்களில் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
I have not, serial to come on air soon???????????????? https://t.co/sGzkiUx5ws
— Radikaa Sarathkumar (@realradikaa) October 17, 2019
இந்நிலையில் 80-களில் முன்னணி நாயகியாக இருந்த நடிகை ராதிகா, பின்னர் குணச்சித்திர வேடங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடிக்கத் தொடங்கினார். வெள்ளித்திரையிலும் மாபெரும் வெற்றிப் பெற்ற அவர், சின்னத்திரையிலும் அனைத்து ரசிகர்களின் மனதிலும் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார்.
ராதிகாவின் ரடான் மீடியா நெட்வொர்க் தென்னிந்திய மொழிகளில் பல்வேறு சீரியல்களையும், கேம் ஷோ-க்களையும் தயாரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 2000-ம் ஆண்டு ’கோடீஸ்வரன்’ என்ற நிகழ்ச்சியை தயாரித்தது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியை நடிகர் சரத்குமார் தொகுத்து வழங்கினார். அதன் பின்பு தான் ராதிகாவும் சரத்குமாரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்கள்.
இந்நிலையில் தற்போது புதிய கோணத்தில் தொலைக்காட்சியில் பரிணமிக்க இருக்கிறார் ராதிகா. ஆம்! கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், “கோடீஸ்வரி” என்ற பெண்களுக்கான கேம் ஷோ-வை தொகுத்து வழங்குகிறார். ஆனால் இதனை ராதிகாவின் ரடான் நிறுவனம் தயாரிக்கிறதா எனத் தெரியவில்லை. டிசம்பரில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. ”அக்டோபர் 28 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தினம் இரவு 8 மணிக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில் ஒரு கேள்விக்கு சரியான பதில் அனுப்பினாலும், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்” என அந்த ப்ரோமோவில் ராதிகா கூறியுள்ளார்.
தவிர, ரடான் மீடியா சன் டிவி-க்கு தயாரிக்கும் புதிய சீரியலிலும் ராதிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.