/indian-express-tamil/media/media_files/2025/07/09/muthu-movie-2025-07-09-17-29-50.jpg)
ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் முத்து திரைப்படம் ஒரு மைல்கல் என்று கூறலாம். வணிக ரீதியாக இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மலையாளத்தில் வெளியான 'தேன்மாவின் கொம்பத்' என்ற படத்தின் மையக் கருவில் இருந்து முத்து திரைப்படம் உருவாகி இருக்கும்.
ஆனால், அப்படத்தின் சாயல் துளியும் இல்லாத அளவிற்கு முத்துவின் திரைக்கதையை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மாற்றி அமைத்திருப்பார். தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பம் மற்றும் ரஜினிகாந்திற்கு ஏற்ற கதையமைப்புடன் இப்படம் உருவாகி இருந்தது.
ரஜினிகாந்தை தவிர மீனா, சரத்பாபு, பொன்னம்பலம், செந்தில், வடிவேலு, ராதாரவி என நட்சத்திர பட்டாளமே முத்து திரைப்படத்தில் இடம்பெற்றனர். இந்நிலையில், முத்து திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது உதவி இயக்குநர் ஒருவரால் ஏற்பட்ட பிரச்சனையை, நடிகர் ராதாரவி குமுதம் டிஜிட்டல் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலின் போது நினைவு கூர்ந்தார்.
அதன்படி, வீட்டில் பணியாளாக இருக்கும் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தை, ராதாரவி 'டேய்' போட்டு அழைக்கும் விதமாக அனைத்து காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். அப்போது, படப்பிடிப்பின் இடைவெளியில், உதவி இயக்குநர் ஒருவர் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தை 'டேய்' என்று கூப்பிடுவது குறித்து ராதாரவியிடம் சுட்டிக் காண்பித்துள்ளார். இதனால், கோபமடைந்த ராதாராவி, உடனடியாக ரஜினிகாந்திடம் சென்று 'டேய்' என்று அழைப்பதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதைக் கேட்ட ரஜினிகாந்த, "அதில் ஒன்றும் பிரச்சனை இல்லையே. யார் அப்படி கூறியது?" என்று கேட்டுள்ளார்.
இதன் மூலம் கதையில் ஒரு கதாபாத்திரத்தை அழைக்கும் விதத்திற்கும், நேரில் ஒருவரை நடத்தும் விதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிந்து கொள்ள முடிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.