நாடே கொண்டாடும் சூப்பர் ஸ்டாரை இயக்கும்போது கூட நான் இப்படித்தான் என்று காம்ப்ரமைஸ் ஆகாமல் இருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்தை பார்த்து வியக்கிறது கோலிவுட்.
இன்னும் முளைக்காத ஹீரோக்கள் கூட தங்கள் படத்தின் முதல் நாள் ஷூட்டிங் படங்களை வெளியில் விட ஆயிரம் நாள், நட்சத்திரம் பார்ப்பார்கள். ஆனால் காலா ஷூட்டிங்கின் படங்கள் உடனே வெளியாகின. அய்யோ...லீக் ஆயிடுச்சு என்ற ரீதியில் கிளப்பப்படும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் எதுவுமே இல்லை.
ஆர்ட்டிஸ்ட் விஷயத்திலும் ரஞ்சித்தின் பிடிவாதம் வியக்க வைக்கிறது. முதல் மூன்று படங்களில் பிடிவாதமாக ஒரே டீமை பயன்படுத்தியவர் இப்போது ஒரு புது டீமோடு இணைகிறார். ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் யாருமே இதற்கு முன்பு ரஜினியுடன் நடித்ததே இல்லை. ஏன்... ரஞ்சித் படத்திலேயே நடித்ததில்லை. கதைக்காகத் தான் நடிகர்கள் என்பதிலும் பிடிவாதமாக இருக்கிறார்.
அதிலும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடி யார் தெரியுமா? ராமன் அப்துல்லா படத்தில் நடித்ததோடு காணாமல் போனாரே அந்த ஈஸ்வரி ராவாம்.
அதேபோல் தான் கதையிலும்... எங்க கம்பெனிக்கு எங்க ஹீரோவை வெச்சு ஒரு படம் பண்ணுங்க... ஆனா கதையில சாதி இருக்கக்கூடாது என்று கண்டிஷன் போட்ட நிறுவனத்திடம் கதை விஷயத்துல தலையிடாதீங்க... என்று மறுத்து விட்டாராம்.
இந்த காரணங்களால் ரஞ்சித்தை ஆச்சர்யமாக பார்க்கிறது கோலிவுட்.