ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் தனது 170 வது படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க உளளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் முக்கியமானவர்கள் ரஜினிகாந்த் – அமிதாப் பச்சன். இந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்த அமிதாப்பச்சன் தற்போது திரைப்படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். அதேபோல் இந்தியில் வெளியான அமிதாப் படங்களை ரீமேக் செய்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது தமிழ படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வரும் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் மற்றும் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் (கெஸ்ட் ரோல்) உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜெய்பீம் இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 1991-ம் ஆண்டு இந்தியில் வெளியான ஹம் என்ற படத்தில் ரஜினிகாந்த் அமிதாப் பச்சன் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த ஹம் படம் தமிழில் பாட்ஷா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு தமிழ் சினிமாவின் அடையாள படங்களில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், ரஜினிகாந்தின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாகவும் அமைந்துவிட்டது. இதனிடையே ஹம் படததிற்கு பிறகு ரஜினிகாந்த் அமிதாப் பச்சன் இருவரும் 32 ஆண்டுகளுக்கு பின் தலைவர் 170 படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் தலைவர் 170 படத்தில் என்கவுன்டர் தண்டனைக்கு எதிராக போராடும் ஓய்வு பெற்ற காவலராக ரஜினி நடிக்கிறார் என்றும் இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil