தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்நிலையில், ரத்தக் குழாயில் வீக்கம் இருந்ததால், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்பினார். இதுகுறித்து மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் ஆர்.கே.வெங்கடாசலம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் கடந்த 30-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் மகாதமனியில் (அயோட்டா) வீக்கம் இருந்தது. அறுவை சிகிச்சை இல்லாமல், இடையீட்டு சிகிச்சை மூலம் அதை சரிசெய்ய திட்டமிடப்பட்டது.
முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் சாய் சதீஷ், மகாதமனி வீக்கத்தை சரிசெய்யும் வகையில் அந்த இடத்தில் ‘ஸ்டென்ட்’ கருவியை பொருத்தினார். இது ஒரு ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை ஆகும். திட்டமிட்டபடி, சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. தற்போது ரஜினிகாந்தின் உடல்நிலை சீராகவும், நலமாகவும் உள்ளது.” என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
'நலம் விசாரித்தவர்களுக்கு நன்றி': ரஜினி அறிக்கை
இந்த நிலையில், தனது உடல் நலம் குறித்து தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் மருத்துவமனையில் இருக்கும் போது, நான் சீக்கிரம் உடல் நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும் நலவிரும்பிகளுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நான் நலம் பெற பிராத்தனைகள் செய்த மனதார வாழ்த்திய என்மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.
அரசியல் தலைவர்களுக்கு நன்றி
"நான் மருத்துவமனையில் இருக்கும்போது, எனது நலன் விசாரித்து, நான் சீக்கிரம் குணமடைய வாழ்த்திய, எனது அருமை நண்பர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் சில நாட்கள் ஓய்வில் இருப்பார் எனத் தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“