கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தானது. பின்னர் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து இருந்த நிலையில் சினிமா மற்றும் சின்னத்திரை படபிடிப்புகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவிலான பணியாளர்களைக் கொண்டு படபிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டது.
தற்போது கொரோனாவின் இந்த இரண்டாம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதோடு, தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு படப்பிடிப்புகள் முடங்கி இருக்கிறது. தற்போது கடந்த மே 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் சீரியல் படபிடிப்புகள் மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்படி கொரோனா பாதிப்புக்கு இடையில் படப்பிடிப்புகள் நடைபெறுவதால் சீரியல் நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அஞ்சுகின்றனர். ஆனால் இது குறித்து சேனல் தரப்பிடம் கேட்டால் நீக்கிவிடுவார்கள் என்ற பயத்தில் தான் பெரும்பாலானோர் ஷூட்டிங் செல்கின்றனர். இப்படி ஒரு நிலையில் கொரோனா தொற்றால் தனது அம்மாவை பறிகொடுத்து உள்ளார் ரோஜா சீரியல் நடிகை ரம்யா.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரம்யா, கடவுள் கொரோனா மூலமாக எனது அம்மா உயிரை எடுத்துக் கொண்டார். 3-4 நாட்களாக எனது அம்மா பட்ட கஷ்டத்தை நான் பார்த்தேன். எனக்கு கொரோனா தொற்று பாதித்த போது, எனது அம்மாவிற்கு நெகட்டிவ் என்றுதான் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வந்தது. நானும் எனது சகோதரியும் எங்கள் மகாராணியை இழந்து விட்டோம். என்ன நடக்கிறது என புரிவதற்குள் எல்லாம் சீக்கிரமே முடிந்துவிட்டது. கடந்த வருடம் அறிவித்த கொரோனா ஊரடங்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது. என்னுடைய அம்மாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, வருமானத்தை விட அம்மாவே முக்கியம் என நான் ரோஜா சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். ஆனால் இப்போது பொருளாதார தேவைகளுக்காக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டியதாகி விட்டது. எனக்கு தோழியாகவும் இருந்த என்னுடைய அம்மாவை இழந்துவிட்டேன். எனவே, எனக்கு இரும்பு உடம்பு எனக்கு எதுவும் ஆகாது என்று யாரும் சொல்லாதீர்கள். எல்லோரும் கவனமாக இருங்கள். என் அம்மாவிற்காக வேண்டிக் கொள்ளுங்கள். கொரோனாவை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். என்று ரம்யா பதிவிட்டுள்ளார்.