SA Chandrasekar talks about his first car in Youtube video: எங்க அம்மா என்னிடம் நீ சாதிச்சுட்ட என்று சொன்னது எனக்கு பெருமையா இருந்தது, நம்ம மனசு, நடத்தை தான் நம்மை உயர்த்துது என எஸ்.ஏ.சந்திரசேகர் பழைய நினைவுகளை பகிர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
Advertisment
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை தனது யூடியூப் பக்கம் மூலமாக வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், தான் முதல் கார் வாங்கியது முதல், மனசாட்சியை உணர்ந்தது வரை பேசியுள்ளார்.
அந்த வீடியோவில், இயக்குனராவேன் என்று நிச்சயம் நம்பியதால், வேலையை விட்டுவிட்டு உதவி இயக்குனராக சேர்ந்தேன். அங்கு இணை இயக்குனர் மணி அண்ணன் எங்களை ஒரு பெயர் சொல்லி அழைப்பார். நான் உதவி இயக்குனராக முதலில் கிளாப் போர்டு அடித்தேன். ஒரு வாரம் சென்ற நிலையில், கிளாப் போர்டில் ஒரு சந்தேகம் வந்து மணி அண்ணனிடம் கேட்டப்போது, என்னை கிட்டத்தட்ட அடிக்க வந்துவிட்டார். அதுக்குள்ள எல்லாம் தெரிஞ்சுக்கனுமா என திட்டினார். பின்னர் சூட்டிங் முடிந்து கிளம்பும்போது, இயக்குனரிடம் மணி அண்ணனிடம் கேட்ட சந்தேகத்தைக் கேட்டேன், அவர் எனக்கு விளக்கம் அளித்தார். இது நடந்தது 1970களில்.
பின்னர், 1980களில் நான் இயக்குனராகி, 3 படம் செய்த பிறகு, ஒரு கார் வாங்கினேன். வாங்கினேன் என சொல்ல முடியாது. ஏனெனில், நடிகர் ஜெய்சங்கர் சார், நான் குடும்பத்தோடு மோட்டர் சைக்கிளில் செல்வதைப் பார்த்துவிட்டு கார் வாங்க சொன்னார். நான் தயங்கியபோது, என்னை அடுத்த நாள் வீட்டுக்கு வரவழைத்து அவருடைய பியட் காரை எனக்கு வழங்கினார். அப்படி தான் எனக்கு முதல் கார் கிடைச்சது.
பிறகு, நான் எங்க அம்மாவை வரவழைத்து அந்தக் காரில், குடும்பத்தோடு, வேளாங்கண்ணி கோயிலுக்குச் சென்றோம். என்னை எங்க வீட்டில், நீ சரியா வரமாட்டே என சொல்லி, தண்ணி தெளிச்சு விட்டதால், நான் முன்னுக்கு வந்தப்பிறகு, அதை அவர்களிடம் காயப்படுத்தாமல் காட்ட, காரில் அழைத்துச் சென்றேன்.
வேளாங்கண்ணியில் சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது, எங்க அம்மா என்னிடம் நீ சாதிச்சுட்ட என சொன்னாங்க. அவங்க அப்படி சொல்ல எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கோம் நினைச்சேன், ஆனாலும், எனக்கு இது சாதனையா தெரியல, நான் இன்னும் நிறைய செய்ய வேண்டியது இருக்குனு சொன்னேன். எங்க அம்மா என்ன பத்தி ரொம்ப பெருமையா பேசிக்கிட்டே வந்தாங்க, எனக்கு மனநிறைவா இருந்துச்சு.
அடுத்த நாள் அந்த காரில் தி.நகருக்கு ஷாப்பிங் போனேன், அப்போது நான் பிளாட்பார்மில் படுத்து தூங்கிய இடத்தில் என்னுடைய காரை நிறுத்திவிட்டுச் சென்றேன். அப்போது எதிரில் மணி அண்ணன் வந்தார். அவரது பரிதாப நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவரிடம் பேசியபோது, அவரது நிலையை சொன்னார், எனக்கு பரிதாபமாக இருந்தது. பின்னர் அவருக்கு சிறு உதவி செய்தேன், அவர் என்னிடம் மன்னிப்புடன் நன்றி சொன்னார். அப்போது தான் எனக்கு புரிந்தது, நம்முடைய நடத்தை, மனசு தான் நம்மை உணர்த்துது என்று புரிந்துக் கொண்டேன். மனிதர்கள் மனசாட்சியோடு நடந்துக் கொள்ள வேண்டும், என்று பேசியுள்ளார்.