பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரன்பீர் கபூர் சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் தயாராகி வரும் ராமாயணம் படத்தின் முதல் பாகம் வரும் 2026-ம் ஆண்டு தீபாவளி தினத்திலும், 2-ம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளி தினத்திலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, படத்தின் முதல் போஸ்டரும் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகம் போற்றப்படும் புராணக்கதைகளில் ஒன்றாக இருக்கும் ராமாயண கதையை இதற்கு முன்பு, பல படங்கள் மற்றுமு் டிவி சீரியல்களில் சொல்லி இருந்தாலும், அதற்கான வரவேற்பு இன்னும் மக்கள் மத்தியில் இருந்துகொண்டு தான் இருக்கிறது. இதனை தக்கவைக்கும் வகையில் தற்போது ராமாணம் படம் 2 பாகங்களாக இந்தியில் தயாராகி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இதில் ராமனாக ரன்பீர் கபூர் நடிக்க, சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார்.
அதேபோல் கே.ஜி.எஃப் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கும் நடிகர் யஷ் இந்த படத்தில் ராவணன் கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தின் வெளியீடு குறித்து தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோவின் நமித் மல்ஹோத்ரா இந்த படம் 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
இது குறித்து நமித் மல்ஹோத்ரா வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், 5000 ஆண்டுகளுக்கும் மேலாக பில்லியன் கணக்கான இதயங்களை ஆட்சி செய்த இந்த காவியத்தை பெரிய திரையில் கொண்டு வருவதற்கான உன்னதமான தேடலை நான் தொடங்கினேன். இன்று, அது வடிவம் பெறுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் அணிகள் ஒரே ஒரு நோக்கத்துடன் அயராது உழைக்கின்றன: நமது வரலாறு, நமது உண்மை மற்றும் நமது கலாச்சாரம் - நமது ராமாயணம் - நமது கனவை நிறைவேற்றும் போது எங்களுடன் சேருங்கள். 2026 ஆம் ஆண்டு தீபாவளியில் பாகம் 1 மற்றும் 2027 ஆம் ஆண்டில் பாகம் 2 வெளியாகும் என்று பெருமையுடனும் மரியாதையுடனும் அறிவிப்பதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து நமித் மல்ஹோத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படத்தின் படத்தின் முதல் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் தங்க ஒளியுடன் ஒளிரும் மந்திர அம்பு உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதியுடன், "நமித் மல்ஹோத்ராவின் ராமாயணம்" என்று போஸ்டரில் எழுதியுள்ளது.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோருடன், கைகேயியாக லாரா தத்தாவும், அனுமனாக சன்னி தியோலும், மந்தாராவாக ஷீபா சத்தாவும் நடிக்கின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரன்பீர் மற்றும் சாய் பல்லவி முழு உடையில் காட்சியளிக்கும் செட்டில் இருந்து கசிந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“