கே.ஜி.எஃப் இயக்குனர் ( பிரசாந்த் நீல் ) மற்றும் பாகுபலி நடிகர் (பிரபாஸ்) என இரு பெரும் துருவங்கள் இணைந்ததாலோ என்னவோ இப்படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சம் தொட்டிருந்தது. பலமுறை ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு நீண்ட பரபரப்புக்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் "சலார்" படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்ந்துள்ளது ? என்பதை பற்றிய முழு விமர்சனம்.
கதைக்களம் :
வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் நாயகி ஸ்ருதி ஹாசனை கடத்த இரண்டு குழுக்கள் முயற்சி செய்கின்றன. இவர்களிடமிருந்து ஸ்ருதி ஹாசனை நாயகன் பிரபாஸால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்படுகிறது.ஆனால் பிரபாஸோ, தனது தாயிடம் கொடுத்த சத்தியத்திற்காக சண்டை சச்சரவுகளும் செல்லாமல் ஒதுங்கி வாழ்கிறார். நாயகியை காப்பாற்றும் முயற்சியில் நிலைமை கை மீறி போக ஒரு கட்டத்தில் அவரது தாயே “போய் அவளை காப்பாத்து” என கூற, ராட்சசனாக மாறி எதிரிகளை துவம்சம் செய்கிறார் பிரபாஸ்.இந்த வில்லைன் கும்பல்களின் தலைவனாக வருகிறார் பிரித்விராஜ். நண்பர்களாக இருந்த பிரபாசும், பிரித்திவிராஜும் எதிரிகளாக மாற என்ன காரணம் ? ஸ்ருதிஹாசனை ஏன் வில்லன் கும்பல் கொல்லத் துடிக்கிறது என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்வது தான் படத்தின் மீதி கதை.
நடிகர்களின் நடிப்பு :
ஒரு மிரட்டலான ஆக்சன் ஹீரோவாக ரசிகர்களை கிரங்கடித்திருக்கிறார் பிரபாஸ்.ரத்தம் தெறிக்க தெறிக்க வரும் காட்சிகளில் எல்லாம் பிரபாஸ் மாவீரனாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஆக்சன் காட்சிகளில் அசத்தும் பிரபாஸ் ஏனோ சென்டிமென்ட் காட்சிகளில் சற்று சறுக்கி இருக்கிறார். பிரித்திவிராஜின் பங்களிப்பு பக்காவாக இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய ஒரு தாக்கத்தை வில்லனாக ஏற்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. ஸ்ருதிஹாசனுக்கு நடிக்க பெரிய அளவில் வேலை இல்லை ஆனாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
இயக்கம் மற்றும் இசை
கேஜிஎப் 1&2 படங்களின் மூலம் உலக அளவில் தன் திறமையை நிரூபித்த பிரசாந்த் நீல் அதே போன்று ஒரு ஆக்சன் கலந்த சென்டிமென்ட் உலகத்தை தான் இப்படத்திலும் தேர்ந்தெடுத்திருக்கிறார். கே.ஜி.எப் படங்களின் மூலம் தன் இசையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்ட இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திலும் அதுபோன்ற ஒரு பிரம்மிப்பை இசையால் மக்களுக்கு கொடுத்துள்ளார்.
படம் எப்படி ?
படத்தின் ஆரம்பக் கட்சியிலேயே கேஜிஎப் போன்ற இன்னொரு உலகத்துக்குள் நம்மை அழைத்து செல்லும் இயக்குனர் முதல் பாதி முழுவதும் சண்டை காட்சிகள், சென்டிமென்ட் என அடுத்தடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே வருகிறார். இடைவேளையில் வரும் சண்டைக் காட்சி ஆக்ரோஷத்தின் உச்சம். இடைவேளை வரை மெகா பிளாக்பஸ்டர் முடிவை நோக்கி சென்று கொண்டிருந்த சலார் திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு அந்த வீரியம் மெல்ல மெல்ல குறைய தொடங்குகிறது. முதல் பாதியில் ஸ்லோ மோஷன் காட்சிகள், பில்டப் வசனங்கள், சண்டை காட்சிகள் என எது எது எல்லாம் ரசிகர்களை கொண்டாட வைத்ததோ அதுவே ஒரு கட்டத்துக்கு மேல் "போதும்" என்ற அளவிற்கு நம்மை திகட்ட வைக்கிறது. கேஜிஎப் படத்தில் இருந்தது போன்ற ஒரு அழுத்தமான, வலிமையான வில்லன் இல்லாதது இப்படத்திற்கு பெரிய பலவீனம். அதேபோல ஆங்காங்கே வரும் சென்டிமென்ட் காட்சிகளும் நம்மை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. படத்தின் சண்டைக் காட்சிகள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது 100% உண்மை. ஆக்சன் படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக சலார் அமையும் என்பது உறுதி. ஆனால் வெகுஜன ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்குமா என்பது ஒரு சிறிய கேள்விக்குறி தான்?
மொத்தத்தில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஓரளவுக்கு பூர்த்தி செய்து இருக்கிறது இந்த சலார்.
- நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“