சமந்தா ரூத் பிரபு, கடந்த சில ஆண்டுகளாக அரிதான ஆட்டோ இம்யூன் கோளாறுடன் போராடி வருகிறார். இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலின் போது, துரித உணவுகளின் விளம்பரங்களில் நடிப்பதை தாம் தவிர்த்து விட்டதாகவும், ஏராளமான நிறுவனங்களின் விளம்பரங்களை மறுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Samantha Ruth Prabhu reveals reason behind not doing junk food ads: ‘Now, I vet my brands with 3 doctors…’
"என்னுடைய 20-களில் இந்தத் துறையில் நான் நுழைந்தேன். அப்போது, உங்கள் கைவசம் எத்தனை திரைப்படங்கள் உள்ளன என்பதும், எத்தனை நிறுவனங்கள் தங்களின் விளம்பரங்களில் உங்களை பயன்படுத்த விரும்புகிறார்கள் என்பதும் தான் வெற்றியாக பார்க்கப்பட்டது. அப்போது, பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடை விளம்பர தூதராக என்னை நியமிக்க விருப்பம் தெரிவித்தனர். ஆனால், தற்போது அவை அனைத்தையும் நான் தவிர்த்து விட்டேன். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளேன். ஆம், இதனால் கோடிக்கணக்கான பணம் இழக்கப்படும்" என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், "இப்போது ஒரு நிறுவனத்துடன் விளம்பரம் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக, மூன்று மருத்துவர்களுடன் ஆலோசனை செய்த பிறகே ஒப்புக் கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாற்றம் உருவானதற்கான காரணம் என்ன?
2022 ஆம் ஆண்டு சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. "எனக்கு ஆட்டோ இம்யூன் நிலை இருப்பது கண்டறியப்பட்டபோது, நான் ஆதரவற்ற நிலையில் உணர்ந்தேன். தனிமையில் இருந்த எனக்கு, எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. உங்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டால், ஒரு வாரம் மருந்து சாப்பிட்டால் சரியாகி விடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், என்னுடைய நிலை அப்படி கிடையாது. இது வாழ்நாள் முழுவதும் இருப்பதாகும். இது வாழ்நாள் முழுவதும் தொடரும் என்றும், இதனை குணப்படுத்த முடியாது என்றும் என்னிடம் கூறினர்" என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
மயோசிடிஸ் என்பது தசை அழற்சியை ஏற்படுத்தும் ஒரு நிலை. இதன் விளைவாக வலி மற்றும் சோர்வு ஆகியவை அதிகமாக இருக்கும் என்று மருத்துவர் சந்தோஷ் குமார் அகர்வால் கூறுகிறார். இது பொதுவாக ஸ்டெராய்டுகள் மற்றும் நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளுடன் சிகிச்சையளிக்கப்பட்டாலும், அழற்சி எதிர்ப்பு உணவு அதன் அறிகுறிகளைச் சமாளிக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவ ஊட்டச்சத்து நிபுணரும், விரிவுரையாளருமான சி.வி. ஐஸ்வர்யா, இது குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். "அழற்சி எதிர்ப்பு உணவானது, ஆண்டிஆக்ஸிடன்ட்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த முழு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரைகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை எடுத்துக் கொள்ளக் கூடாது". என்று தெரிவித்துள்ளார்.
எனவே, தன்னுடைய உடல்நிலை குறித்த வெளிப்பாடாக இந்த முடிவை சமந்தா எடுத்திருக்கலாம். மேலும், அவரது விளம்பரங்கள் இளம் தலைமுறையினர் இடையே எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நினைக்கக் கூடும். "இத்தகைய முட்டாள்தனங்களில் ஈடுபட்டதற்காக என்னிடமே நான் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று சமந்தா தெரிவித்துள்ளார்.