நீ பிச்சை எடுக்க போறடா... 40க்கு மேல்தான் உனக்கு வாழ்க்கை; பிரபல நடிகருக்கு ஜாதகம் கணித்த டி.ஆர்: கணிப்பு பலித்ததா?
நடிகர் சரவணன் தனது சினிமா வாழ்க்கையில் பல சவால்களைக் கடந்து வந்துள்ளார். நடிப்பில் மட்டுமல்லாமல், இயக்குநராகும் ஆசையும் தனக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்.
நடிகர் சரவணன் தனது சினிமா வாழ்க்கையில் பல சவால்களைக் கடந்து வந்துள்ளார். நடிப்பில் மட்டுமல்லாமல், இயக்குநராகும் ஆசையும் தனக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்.
சினிமா உலகில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து வரும் நடிகர் சரவணன், தனது ஆரம்பகால வாழ்க்கை, நடிகை லட்சுமியுடனான சந்திப்பு மற்றும் இயக்குநர் டி. ராஜேந்தர் தனது ஜாதகத்தைப் பார்த்துச் சொன்ன ஆச்சரியமான கணிப்புகள் குறித்து இண்டியாக்ளிட்ஸ்க்கு அளித்த ஒரு பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார். நடிகர் சரவணன் 1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான "என் உயிர் தோழன்" திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
Advertisment
இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். 'பருத்தி வீரன்' திரைப்படத்தில் நடித்த சித்தப்பா கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கையில் நடந்த சில அனுபவங்களை பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். சரவணன் தனது வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத சம்பவம் என்று குறிப்பிடுவது நடிகை லட்சுமியைச் சந்தித்ததுதான்.
தான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, வண்ணத்திரை என்ற இதழில் நடிகை லட்சுமியின் டைரிக் குறிப்புகள் வெளியாகிக்கொண்டிருந்தன. அதில் ஒரு நாள், ”இன்று நான் சேலத்துக்குப் போயிருந்தேன். அங்கு ஒரு கல்லூரி பையனைச் சந்தித்தேன். ஒரு வெள்ளைத் திரையில் ஒரு கறுப்புப் புள்ளி எப்படிப் பளிச்சென்று தெரியுமோ, அதுபோல அவன் 30, 40 பேருக்கு மத்தியில் தனியாகத் தெரிந்தான். அவன் என்றைக்காவது ஒரு நாள் ஹீரோ ஆவான்" என்று லட்சுமி எழுதியிருந்ததாக சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குறிப்பைப் படித்த பிறகு, லட்சுமியைச் சந்திக்க ஒரு கடிதம் வந்ததாகவும், அதைப் பயன்படுத்தி லட்சுமியை நேரில் சந்தித்ததாகவும் சரவணன் தெரிவித்துள்ளார். நடிப்பு, முகபாவனைகள், உடல்மொழி, மற்றும் கேமரா முன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று லட்சுமி அம்மா தனக்குக் கற்றுக்கொடுத்ததாக அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். இன்றும், அவர் கற்றுக்கொடுத்த ஒழுக்கங்களும், நடிப்பு நுணுக்கங்களும் தனது மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்திருப்பதாக கூறினார்.
Advertisment
Advertisements
தனது 26 வயதில் தனது ஜாதகத்தை டி.ஆர். பார்த்து, "டேய், நீ 32 வயதில் சினிமாவில் இருக்க மாட்டாய்! பிச்சை எடுக்கப் போறடா! உச்சனை உச்சன் பாதியில் பிச்சை எடுப்பாய்!" என்று சொன்னதாக சரவணன் குறிப்பிட்டிருக்கிறார். அப்போது தனக்கு 13 படங்கள் கைவசம் இருந்ததாகவும், நல்ல ஹீரோவாக இருந்ததாகவும், டி.ஆர். சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும் சரவணன் தெரிவித்தார். டி.ஆர். தனது 29-வது வயதுக்குப் பிறகு ராகு திசை தன்னை உயர்த்தியது போலவே, ராகுவே தன்னை அமுக்கப் போகிறார் என்றும் கூறியிருக்கிறார்.
இந்தக் கணிப்பு கேட்டு தான் ஜோதிடத்தின் மீது பைத்தியமானதாகவும், பல ஜோதிடர்களைச் சந்தித்ததாகவும், அனைவரும் ராகு திசை முடியும் போது தனது ஹீரோயிசம் காலி ஆகிவிடும் என்றும், வீட்டில் உட்காரப் போவதாகவும் சொன்னதாகவும் சரவணன் உறுதிப்படுத்தினார். சொன்னது போலவே, சில காலம் அவர் வீட்டில் உட்கார்ந்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால், அதே டி.ஆர். மற்றும் மற்ற ஜோதிடர்கள், "40 அல்லது 45 வயதுக்குப் பிறகு, இப்போது நீ என்ன உயரத்துக்குப் போனாயோ, அதைவிட மிகப்பெரிய உயரத்துக்குப் போவாய்" என்று சொன்னதாகவும் சரவணன் தெரிவித்தார்.
இந்தக் கணிப்பும் உண்மையானது. தனது 28 வயதில் முடிந்த ஹீரோயிசம், தனது 38 வயதில் 'பருத்திவீரன்' திரைப்படம் மூலம் மீண்டும் உயிர் பெற்றது. சரியாக 40-வது வயதில் அத்திரைப்படம் வெளியானது. தற்போது மீண்டும் 'சட்டமும் நீதியும்' போன்ற படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் சரவணன். இதுவும் இறை செயல் என்று அவர் நம்புகிறார். தனது ஜாதகம் மற்றும் நடக்கவிருக்கும் அனைத்தும் தனக்குத் தெரியும் என்றும், அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.