தீபாவளி தினமான நேற்று வெளியான நடிகர் விஜய்யின் 'சர்கார்' தியேட்டர்களில் ராஜாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும், விஜய் படம் என்பதால், முதல் நான்கு நாட்களுக்கு தியேட்டர்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். அதிலும், வரும் சனி ஞாயிறிலும் மக்கள் சர்காரை நோக்கித் தான் படையெடுப்பார்கள் என்பதால், அடுத்த ஒரு வாரத்திற்கு, நோ டிஸ்டபன்ஸ் தான்.
சரி... படத்தைப் பற்றி நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் இரண்டு ரிவியூக்கள் கொடுத்திருந்தோம். இப்போது, படத்தில் உள்ள சில கேரக்டர்கள் ரியல் லைஃப் கேரக்டர்களோடு எவ்வாறு பொருந்திப் போகின்றன என்பதை லைட்டாக பார்ப்போம்.
பழ.கருப்பையா - ராதா ரவி:
நிஜ வாழ்க்கையிலும், இவர்கள் இருவரும் அரசியல் வாதிகள் தான். ஆனால், இந்த பாத்திரப் படைப்புகள் இவர்களைப் பற்றி அல்ல... தற்போது தமிழகத்தை ஆளும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தான் என்று நாங்கள் சொல்லவில்லை.. தியேட்டரில் பேசிக்கிட்டாங்க.
முதல்வர் இ.பி.எஸ்ஸாக பழ.கருப்பையா, ஓ.பி.எஸ்ஸாக ராதா ரவி என டிசைன் செய்திருக்கிறாராம் நம்ம இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். குறிப்பாக, ராதா ரவியை 'மிஸ்டர்.ரெண்டு' என்று புனைப் பெயர் கொண்டு அழைக்கும் படி முருகதாஸ் அமைத்திருப்பது நக்கல்ஸ்.
பட்.. இதில் ஒரு லாஜிக் சிக்கல் உள்ளது. படத்தில் வரும் காட்சி ஒன்றில், அரசியல் மேடையில் பழ.கருப்பையாவும், ராதா ரவியும் அருகருகே அமர்ந்திருக்க, அங்கே இருக்கும் விஜய்யிடம் கருப்பையா சொல்வார், "இதோ மேடையில் பேசிக்கிட்டு இருக்கானே.. அவன் மீண்டும் தாய்க் கழகத்துடன் இணைய வந்திருக்கான்" என்று. அப்படி என்றால், அந்த பேசிக்கிட்டு இருக்கும் கேரக்டர் தானே ஓ.பி.எஸ் என்று?.
சரிதான்... பட் இது சினிமா தானே! நிஜத்தை அப்படியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே... ஸோ, இ.பி.எஸ்ஸுடன், ஓ.பி.எஸ் இணையும் காட்சியை மட்டும் இயக்குனர் எடுத்துக் கொண்டு விட்டார் போல.
கோமலவள்ளி எனும் வரலக்ஷ்மி:
படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக ரசிக்கும் ரோல் என்றால் அது வரு-வின் கோமலவள்ளி கேரக்டர் தான். படம் பார்க்கும் போது கூட நமக்கு ஏதும் தோணவில்லை... முன் சீட்டில் அமர்ந்திருந்த லேடி ஒருவர் தன் கணவரிடம் கூறும் போது தான், அட ஆமாம்ல நமக்கே உரைத்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமலவள்ளி. படத்தில், இந்த கோமலவள்ளி கேரக்டர், தன் அப்பாவை அவர் சம்மதத்துடனேயே போட்டுத் தள்ளி முதல்வராகி, கட்சியைக் காப்பாற்ற நினைக்கிறார். முருகதாஸின் குசும்பு இதில் வேற லெவல்.
'கோடநாடு வாசலில் நிக்க வச்சதுக்கு கோமலவள்ளி என்று பெயர் வைத்து திட்ட தான் முடியும்' என்றும் சிலர் முணுமுணுத்தது நமது காதுகளில் விழாமல் இல்லை.
ஆனால், இதனை அதிமுகவினர் ரசிக்கவில்லை என்று தெரிகிறது. அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'விஜய்க்கு இது தேவை இல்லாத வேலை' என்று எச்சரித்து இருப்பது தனிக்கதை.
மறுபடியும், கோமலவள்ளிக்கே வருவோம்... அந்த போட்டுத் தள்ளும் சீனில், கோமலவள்ளி தன் வயதான பழுத்த அரசியல்வாதியான அப்பாவிடம் கூறுவார், 'நாளை தமிழகம் முழுவதும் உங்களைப் பற்றித் தான் பேச வேண்டும். டெல்லியில் இருந்தெல்லாம், அரசியல்வாதிகள் வர வேண்டும்' என்று ஒவ்வொரு மாத்திரியாக எடுத்துக் கொடுப்பார். தன் இறப்பின் மூலம், மக்களிடம் அனுதாப அலையை உண்டாக்கி, கட்சியும், ஆட்சியும் கவிழ்ந்து போகாமல் இருக்க, தனது மகள் முடிவெடுத்துவிட்டாள் என்பதை உணரும் பழ.கருப்பையா தெரிந்தே மரணித்துப் போகிறார்.
அதாவது, இனிமேல் உன்னால் எந்த பயனும் இல்லை. கட்சியைக் காப்பாற்ற இறந்து போ தந்தையே என்று மகள் சொல்வது போல் காட்சியை அமைத்திருக்கும் எங்க தல முருகதாஸுக்கு எவ்ளோ தில்லு பார்த்தியா... பட், இந்த சீனின் இன்ஸ்பிரேஷன் எது என்பதை எல்லாம் அந்த தியேட்டரில் யாரும் பேசிக் கொள்ளவில்லை. ஸோ, நாங்களும் சொல்ல மாட்டோம்.
நீங்களே யோசிச்சுப் பார்த்துக்கோங்க... அம்புட்டு தான்.
வேற யாரு பாக்கி?... என்னது ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் யார் கேரக்டரா?.... அட நீங்க வேற, அவங்களுக்கு படத்துலயே எந்த கேரக்டரும் இல்லை என்பதே நமது பணிவான கருத்து.