விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் சர்கார் படத்தின் கதையும், செங்கோல் படத்தின் கதையும் ஒன்றே என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சர்கார் கதை:
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி என ஒட்டு மொத்த திரை நட்சத்திரங்களும் நடித்துள்ள சர்கார் படத்தின் பிரச்சனை நாளுக்கு நாள் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.
சர்கார் என்ற தலைப்பில் தொடங்கி, படத்தில் வரும் வசனங்கள் வரை பல பிரச்சனைகள் வரலாம் என்று படத்தின் இயக்குனர் முருகதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால் படத்தின் கதையே இப்படி பிரச்சனையானதாக இருக்கும் என்று எவரும் நினைக்கவில்லை.
சர்கார் படத்தின் கதை தன்னுடைய கதை என்று வருண் ராஜேந்தர் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு முன்பாக வருண் திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து இருவரின் கதையையும் ஒப்பிட்டு பார்த்த சங்கம் ஒரே மாதிரி இருப்பதாக நேற்று (26.10.18) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த அறிக்கையில், சர்கார் படத்தின் கதையை செங்கோல் என்ற பெயரில், கடந்த 2007-ஆம் ஆண்டே வருண் பதிவு செய்துள்ளதைத் தாங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், சர்க்கார் படத்துக்கு எதிராக வருண் தொடர்ந்துள்ள வழக்கில், அவர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தடையாக இருக்க மாட்டோம் என, இயக்குனர் கே.பாக்கியராஜ் தலைமையிலான, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நீதி மன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் வரும் அக்டோபர் 30-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரச்சனை மேலும் வெடித்தால் தளபதி விஜய் தலையிட வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.