நடிகை சீதா பார்த்திபனை விவாகரத்து செய்த பிறகு, சீரியல் நடிகர் சதீஷை காதலித்து திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்து விட்டார் என்று இணையத்தில் செய்திகள் பரவி வந்த நிலையில், அதை மறுத்து சீரியல் நடிகர் சதீஷ் விளக்கம் அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. பாண்டியராஜன் இயக்கி நடித்த ஆண்பாவம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை சீதா பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமா முன்னணி நடிகையாக இருந்தார். அப்போது, எல்லாம் நேரம் இல்லாமல் பிஸியாக இருந்த நடிகை சீதா ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் கூட நடித்து இருக்கிறார். புதிய படங்களுக்கு கால் ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருந்தார். அப்படி இருந்த நடிகை சிதாவின் சினிமா வாழ்க்கை வீழ்ந்ததற்கு அவருடைய திருமண வாழ்க்கை தான்.
இயக்குனர் பாக்யராஜ்ஜிடம் உதவி இயக்குனராக இருந்த பார்த்திபன் முதல் முறையாக இயக்கி நடித்த புதிய பாதை படத்தில்தான் அவருக்கு ஜோடியாக நடிகை சீதா நடித்தார். சீதா ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தாலும் தன்னுடைய தந்தையின் வற்புறுத்தலினால் நடித்ததாக சீதாவே பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
புதிய பாதை படத்தில் நடிக்கத் தொடங்கிய பிறகு, படத்தின் பாதியிலேயே சீதாவுக்கும் பார்த்திபனுக்கும் காதல் ஏற்பட்டு இருக்கிறது. இவர்களுடைய காதலுக்கு சீதாவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி நடிகர் பார்த்திபனுடன் 1989-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
பிஸியாக நடித்து வந்த சீதா திருமணத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விட்டுவிட்டார். சீதா - பார்த்திபன் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகனையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
காலத்தின் ஓட்டத்தில், சீதாவுக்கும் பார்த்திபனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2001-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். விவாகரத்துக்கு பிறகு, மீண்டும் நடிக்கத் தொடங்கிய சீதாவுக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சீரியலில் நடிக்க தொடங்கினார்.
அந்த நேரத்தில்தான் சீதா 2010-ம் ஆண்டு சீரியல் நடிகர் சதீஷை தன்னுடைய 43வது வயதில் காதலித்து திருமணம் செய்ததாகவும் பிறகு அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சில வருடங்களிலேயே பிரிந்து விவாகரத்து செய்துவிட்டார் என்றும் சீதாவை காதலித்து திருமணம் செய்து சதீஷ் தான் ஏமாற்றி விட்டார் என்றும் சீதாவின் சொத்துக்காக சதீஷ் அவரை திருமணம் செய்து கொண்டார் என்றும் பல்வேறு வதந்திகள் உலா வந்தது.
இப்படியான செய்திகள் எல்லாம் சமூக ஊடகங்களின் காலத்தில், பெரிய அளவில் பரவும்போது அதற்கு சம்பந்தப்பட்டவர் பதிலளித்து ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த வகையில், சீரியல் நடிகர் சதீஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அந்த வீடியோவில் சீரியல் நடிகர் சதீஷ் கூறியிருப்பதாவது: “நான் நடிகை சீதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் என்று சில செய்திகள் பரவி வருகிறது. இது பல வருடங்களாகவே வலம் வரும் வதந்திதான். ஆனால், உண்மையில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவில்லை. எனக்கு ஏற்கனவே ஒரு பெண்ணோடு திருமணம் நடைபெற்று இருந்தது. பிறகு கருத்து வேறுபாடல் நாங்கள் பிரிந்து விட்டோம். என்னுடைய குழந்தைகள் என்னுடைய முதல் மனைவியோடு தான் இருக்கிறார்கள். அவர்களிடம் என்னுடைய குழந்தைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நானும் சரி என்று சொல்லிவிட்டேன்.” ” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சீரியல் நடிகர் சதீஷ் கூறுகையில், “பார்த்திபனை சீதா பிரிந்ததற்கு பிறகு நான் அவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டேன் என்றும் அவருடைய சொத்துக்களை நான் ஏமாற்றி விட்டேன் என்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதில் எல்லாம் உண்மையே கிடையாது.
நானும் சீதாவும் உண்மையில் நல்ல நண்பர்கள் நாங்கள் ஆரம்பத்தில் ஒன்றாக நடித்திருக்கிறோம். இப்ப வரைக்கும் குடும்ப நண்பர்களாகத்தான் இருக்கிறோம். எங்களுடைய வீட்டில் எந்த ஒரு பங்க்ஷன் என்றாலும் சீதா அதில் என்னுடைய தோழியாக கலந்து கொள்வார். அதுபோல நானும் எப்பவாவது நேரம் கிடைக்கும்போது சீதாவிடம் பேசுவேன் அவ்வளவுதான். ஆனால், எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவும் இல்லை, விவாகரத்து ஆகவும் இல்லை” என்று நடிகர் சதீஷ் விளக்கம் அளித்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“