Serial Artist Sri Vidhya: சின்னத்திரை ரசிகர்களுக்கு ‘கோலங்கள்’ ஆர்த்தியை எப்போதும் மறக்காது. "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்", "என்னவளே" போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிப்புத்துறைக்குள் வந்த ஆர்த்தியின் நிஜப்பெயர் ஸ்ரீவித்யா. ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரிட் “ஜில்லுன்னு ஓரு காதல்” படத்தில் சப்போர்ட்டிங் ரோலிலும் நடித்துள்ளார்.
Advertisment
பின்னர் சீரியலுக்கு வந்த ஸ்ரீவித்யா, "சிவ சக்தி", "முந்தனை முடிச்சு", "கோலங்கள்", "ஆனந்தம்", "தென்றல்" உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக கோலங்கள் சீரியலில் ஆர்த்தி கதாபாத்திரமும், தென்றல் சீரியலில் சாருலதா வீரராகவன் என்ற கதாபாத்திரமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
ஸ்ரீவித்யாவின் உருண்டை விழிகள், கோபமான சீன்களில் அதிகம் ஸ்கோர் செய்தது. சினிமா, சீரியல் என படு பிஸியாக இருந்தாலும், படிப்பை விட்டு விடாமல் எம்.பி.ஏ படித்திருக்கிறார். பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீவித்யா, தனது உறவினரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பிறகு சில காலம் நடிப்பிற்கு பிரேக் விட்டார். குடும்பம், குழந்தை என்றிருந்த அவர், சிறு இடைவெளிக்கு பிறகு ”சித்திரம் பேசுதடி”, ”கைராசி குடும்பம்” ஆகிய நாடகங்களின் மூலம் சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி ஆனார். பின்னர் சொந்தமாக தொழில் செய்யலாம் என்ற முடிவில் மீண்டும் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டார்.
வெளிநாடுகளில் ஃபேமஸாக இருக்கும் 'கிளவுட் கிச்சன்’ எனும் கான்செப்டில் சொந்தமாக தொழில் தொடங்கி, அதை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார் ஸ்ரீவித்யா. சென்னையில் தங்கி வேலை செய்யும் பேச்சிலர்களுக்கு நல்ல சுவையான சாப்பாடு செய்து தரும் நிறுவனம் தான் அது.