/indian-express-tamil/media/media_files/2025/08/22/indra-2025-08-22-14-00-08.jpg)
நடிகர் வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள கிரைம் த்ரில்லர் திரைப்படம் 'இந்திரா', இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குநர் சபரிஷ் நந்தா இயக்கியுள்ள இந்தப் படம், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா என்பதை பற்றி தினமணி யூடியூப் பக்கத்தில் ரிவ்யூ பொடப்பட்டுள்ளது.'இந்திரா' என்பது வசந்த் ரவி ஏற்று நடித்துள்ள நாயகனின் பெயராகும். இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஒரு காவல்துறை அதிகாரி.
சென்னையில் தொடர்ச்சியாக நடக்கும் மர்மக் கொலைகள், ஒவ்வொரு கொலையின்போதும் பாதிக்கப்பட்டவர்களின் கைகள் மணிக்கட்டுப் பகுதியில் துண்டிக்கப்படுவது என கதை விறுவிறுப்புடன் தொடங்குகிறது. இந்தக் கொலைகளுக்கான நோக்கம் என்ன, கொலையாளி யார் என்பதைப் படம் தேடுகிறது. எதிர்பாராதவிதமாக, நாயகன் இந்திராவின் மனைவி மெஹ்ரின் பிரசாதா கொலை செய்யப்படுவதும், அந்தக் கொலைக்கும் தொடர் கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதும் கதைக்கு முக்கியத் திருப்புமுனையாக அமைகிறது.
படத்தில் சுவாரஸ்யமான திருப்பங்கள் இருந்தாலும், சில லாஜிக் குறைபாடுகள் படத்தின் பலவீனமாக உள்ளன. குறிப்பாக, கொலைகளைச் செய்யும் கொலையாளியின் கதாபாத்திரம் வலுவில்லாமல் இருப்பதும், நடிகர் சுனில் ஏற்றுள்ள பாத்திரம் மர்மம் என்ற பெயரில் தெளிவின்றி இருப்பதும் கேள்விகளை எழுப்புகின்றன. ஒரு சில காட்சிகள் சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், திரைக்கதையின் பலவீனம் காரணமாக கதை வலுவிழக்கிறது. ஆனாலும், இடைவேளைக் காட்சி ஒரு நல்ல திருப்பமாக அமைந்துள்ளது.
நடிகர் வசந்த் ரவி, சில நெருக்கமான காட்சிகளில் தனது நடிப்பில் முன்னேற்றம் காட்டியுள்ளார். குறிப்பாக, கண் பார்வையற்றவராக அவர் நடிக்கும் காட்சிகளில் பதற்றத்தை வெளிப்படுத்திய விதம் சிறப்பு. நடிகை அனிகா சுரேந்திரன் சில காட்சிகளில் வந்தாலும், தனது உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அனிகா மற்றும் நடிகர் சுமேஷ் மூருக்கு இடையேயான காட்சிகள் கதைக்கு பலம் சேர்க்கின்றன. சுமேஷ் மூரின் சிரிப்பும் பார்வையும் இரண்டாம் பாகத்திற்கான ஆவலைத் தூண்டுகிறது.
தொழில்நுட்ப ரீதியாக, ஒளிப்பதிவு, இசை மற்றும் எடிட்டிங் ஆகியவை கச்சிதமாக உள்ளன. சில காட்சிகளின் கலரிஸ்ட் பணிகள் சிறப்பாக அமைந்துள்ளன. ஒரு அறிமுக இயக்குநராக சபரிஷ் நந்தாவிடம் மேக்கிங் திறன் இருக்கிறது. ஆனால், அவர் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தினால் சிறந்த படங்களை உருவாக்க முடியும். 'இந்திரா' திரைப்படம் வெறும் கிரைம் த்ரில்லராக மட்டுமல்லாமல், மனித குணங்களின் இருண்ட பக்கங்களை வெளிப்படுத்த முயற்சித்துள்ளது. ஆனால், கதையின் உணர்வுகள் சரியாகக் கடத்தப்படாததால், பார்க்கலாம் ரகமாகவே இந்தத் திரைப்படம் அமைந்துள்ளது. மொத்தத்தில், சில நல்ல தருணங்கள் இருந்தாலும், லாஜிக் குறைபாடுகளால் படம் முழுமையான திருப்தியைத் தரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.