திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தப்போது தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா தெரிவித்திருந்ததை நடிகை ஷகிலா விமர்சித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 50 நாட்களை நிறைவு செய்த போட்டியாளர்களுக்கு, அவர்களின் வாழ்க்கையில் நடந்த பூகம்பம் பற்றி பேச ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இந்த டாஸ்கில் பேசிய விசித்ரா, 2001 ஆம் ஆண்டு ஒரு தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது பாலியல் தொந்தரவு ஏற்பட்டது. சென்னை திரும்பிய பிறகு இந்த சம்பவம் குறித்து நடிகர்கள் சங்கத்தில் புகார் செய்திருந்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் காவல் நிலையத்திற்கு செல்லாமல் நடிகர் சங்கத்தில் புகார் செய்வது ஏன் என்று கேட்டனர்.
அந்த படத்தின் ஷூட்டிங் கேரளாவில் மலப்புழாவில் நடந்தது. அதனால் அங்குள்ள ஒரு ஹோட்டலில் நான் தங்கி இருந்தேன். அந்த ஹோட்டலில் தான் என்னுடைய வருங்கால கணவரை நான் சந்தித்தேன். அவர் ஜெனரல் மேனேஜராக அந்த ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த படத்தில் ஹீரோவிடம் நான் இந்த படத்தில் தான் நடிக்கிறேன் என்பதை அறிமுகம் செய்வதற்காக போனேன். ஆனால் அவர் என்னுடைய பெயரைக் கூட கேட்கவில்லை. நீ இந்த படத்தில் நடிக்கிறாயா? அப்போ நைட்டு ரூமுக்கு வந்துடு என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் அப்படி சொன்னதுமே எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பிறகு நான் என்னுடைய ரூமுக்கு சென்று தூங்கிவிட்டேன். அதனால் ஒரு சிலர் இரவில் என்னுடைய அறையை வந்து தட்டி ரகளை செய்திருந்தனர். இதனால் நான் மிகவும் பயந்தேன்.
எப்படியாவது சூட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதனால் ஒவ்வொரு நாளும் இதே மாதிரி பிரச்சனையை நான் சகித்து கொண்டிருந்தேன். அந்த நடிகர் சொல்லி சில நபர்கள் தினமும் குடித்துவிட்டு வந்து என்னுடைய அறை கதவை தட்டி பிரச்சனை செய்தனர். இதை கவனித்து என்னுடைய கணவர் என்னிடம் என்ன பிரச்சனை உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டார்.
அப்போது நான் இந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு அறை வேண்டும், நான் இங்கே தங்கி இருக்கிறேன் என்பது யாருக்கும் தெரியக்கூடாது என்று சொன்னேன். அவரும் என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு ஒவ்வொரு நாளும் ஒரு அறையில் தங்க வைத்தார். அது யாருக்குமே தெரியாது. இது அந்த நடிகருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.. நான் அவர்கள் எண்ணத்திற்கு ஒத்துப் போகவில்லை என்பதால் என்னை எப்படியாவது படத்தில் இருந்து தூக்க வேண்டும் என்று மொத்த படக்குழுவே பிளான் செய்தது.
ஒருநாள் படப்பிடிப்பு சண்டை காட்சி நடந்து வந்தது. ஸ்டாண்ட் மாஸ்டர்கள் எல்லாரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு நபர் பின்னாடி இருந்து என்னை தவறான நோக்கத்தில் பின்பக்கத்தில் கை வைத்தார். நான் முதல் முறை தெரியாமல் நடந்தது என்று அமைதியாகிவிட்டேன். ஆனால் அடுத்த டேக்கிலும் இதே மாதிரி நடந்தது. பிறகு நான் அந்த நபரை கையும் களவுமாக பிடித்துக் கொண்டுபோய் ஸ்டாண்ட் மாஸ்டர் இடம் ஒப்படைத்தேன்.
ஆனால் அவர் அந்த நபரை எதுவும் செய்யாமல் என்னை பளார் என்று அறைந்தார். அங்கிருந்த இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் யாருமே எனக்கு நடந்த அநீதியை தட்டி கேட்கவில்லை, குரல் கொடுக்கவும் இல்லை. நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன். என்னுடைய நண்பர் புகார் கொடுக்க சொன்னார். நானும் புகார் கொடுத்திருந்தேன். அந்த செய்தி, நியூஸ் சேனல்களிலும் வெளியாகி இருந்தது. ஆனால் எனக்கு திரைத்துறையில் இருந்து யாருமே உதவி செய்யவில்லை.
நடிகர் சங்கத்திடம் நான் பேசும்போது கூட அவர்கள் இதை தூக்கிப் போட்டுவிட்டு நடிப்பை போய் பாருமா என்று அந்த நேரத்தில் தலைவராக இருந்தவர் கூறினார். இதனால் தான் நான் வெறுத்துப் போய் 20 வருடமாக நடிப்பை விட்டு விலகி இருந்தேன் என்று வேதனையோடு கூறினார்.
இந்தநிலையில், விசித்ராவின் கருத்துக்களை நடிகை ஷகிலா விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக, தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த நடிகை ஷகிலா தெரிவித்ததாவது; ”விசித்ரா போன்ற வலிமையான போட்டியாளரை நீங்கள் இதுவரை பிக்பாஸில் பார்த்துள்ளீர்கள் என எனக்கு தெரியவில்லை. அப்படியிருக்கும் போது அவர் இது போன்ற பிரச்சினைகளுக்கு எப்படி ஆளாகியிருப்பார் என நீங்கள் நம்புகிறீர்கள் என்று தெரியவில்லை.
ரவீனாவிடம் விசித்ரா கதை ஒன்றை சொன்னார். பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் ஒரு பெண் ஒரு காயத்தோடுதான் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என அவர் சொல்கிறார். காரணம் கேட்டால் காவல் நிலையத்தில் உள்ள போலீஸாரிடம் நமக்கு நேர்ந்த கொடுமை குறித்து நிரூபிக்கப்பட்ட சான்றுகள் வேண்டும் என விசித்ரா சொல்லியிருந்தார். அந்த விஷயத்தில் அன்று அவர் செய்த தவறை இந்த விஷயத்தில் சமன் செய்ய நினைக்கிறார் என நினைக்கிறேன்.
முன்பு அவருக்கு வாய்ப்பு கிடைத்த போதே இந்த விஷயங்களை சொல்லியிருக்கலாமே? அதை விட்டுவிட்டு இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கதை சொல்லல் டாஸ்கில் சொல்ல வேண்டிய காரணம் என்ன? அவரது கணவரை அவர் ஹீரோ என்றும் அவர்தான் தன்னை காப்பாற்றிக் கொண்டு போனார் என்றும் விசித்ரா கூறியுள்ளார்.
அப்படியானால் இப்போது ஏன் விசித்ரா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார்? அப்போது இந்த மீடியா, சினிமாவெல்லாம் வேண்டாம் என்று சொன்ன உங்களது கணவர், இப்போது ஏன் உங்களை மீண்டும் இந்த உலகிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்? இதற்கு முன் சீரியலுக்கு வந்தீர்களே அங்கு இது போன்ற தொந்தரவுகள் இல்லையா, கண்டிப்பாக இருக்கிறது.” இவ்வாறு ஷகிலா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“